<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, May 20, 2013

தமிழ்நாட்டில் எங்கும் தமிழில்லை, எதிலும் தமிழில்லை

அரச கல்வி ஆங்கில மயமாக்கவுடன் திராவிட கருத்தியலின் இறுதி மூச்சும் அடங்கிவிடும்.  எதைக் கூறி, எதை வைத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அதையே புதைத்துவிட்டு புதிய கடவுள்களுக்கு அடிப்பணிந்து விட்டார்கள்.  தமிழ்ப் பற்று, தமிழ் வளர்ச்சி என்று யாரும் இனி பேச, சொத்தமொழி மாநாடுகள் நடத்த இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. 

சமசீர் கல்வி பரிந்துரைக்கப்பட்ட போது தாய்மொழிக் கல்வி பரிந்துரையை திமுக கருத்தில் கொள்ளவில்லை.  தமிழ் ஒரு பாடம் ஆகக் கூட தமிழ்நாட்டில் கொண்டுவர முடியவில்லை.  தமிழ்நாட்டு வலைத்தளங்களில் கூட தமிழை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்கவில்லை. 

அதிமுக ஆங்கிலத்தை அரச பள்ளிகளில் கல்வி மொழியாக ஆக்கி தமிழின் அடி ஊற்றுக்கே வேட்டு வைத்துள்ளது.  மேல் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று போலிக் கோசம் போடுகிறார்கள்.  சட்டம் மக்கள் புரியும் மொழியில் இருக்க வேண்டுமாம். உண்மைதான்.  அப்படியானால் அடிப்படைக் கல்வி மக்கள் மொழியில் இருக்கத் தேவை இல்லையா. 

1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் தற்கால மருத்துவம் தமிழில் சொல்லித் தரப்பட்டது.  கலைச்சொற்கள், கலைக்களஞ்சியங்கள், பாடத்திட்டங்கள் என்று ஒன்றரை நூற்றாண்டாக ஆய்த்தங்கள் செய்துமுடிந்த பின்பும் மருத்துவக் கல்வி தமிழில் இல்லை.  ஏன் அரச குடியாட்சிப் பணிகளில் கூட தமிழ் முறையாக அமுலில் இல்லை.  என்ன கேட்டுக்கு ஆட்சி மொழிச் சட்டம். 

தமிழை ஆட்சிமொழியாக, கல்வி மொழியாக, சட்ட மொழியாக ஆக்க திராவிட கட்சிகளால் முடியவில்லையா. அப்படியானால் இவர்கள் திறமை அற்றவர்கள், வல்லமை இல்லாதவர்கள்.  விரும்பவில்லையா, அப்படியானால் இவர்கள் போலிகள்.  இரண்டுமே இல்லையா, அப்புறம் எதற்கு இவர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கத்த வேண்டும். 

கல்வி இல்லாத மொழி மொழியல்ல.  அது வெறும் எலும்புக் கூடும்.  ஒருவனால் தமிழில் அறிவியல் பேச முடியாது எனில், சமூகவியல் பேச முடியாது எனில், தொழில்நுட்பம் பேச முடியாது எனில் வேறு என்ன பேசி என்ன பயன். 

ஈழத்தில் தமிழ் திட்டமிட்டு கொல்லப்படுகிறது.  தமிழ்நாட்டில் தமிழை தற்கொலை செய்கிறார்கள்.  ஆங்கிலக் கல்வி நிறைவேறினால் தமிழியமும் திராவிடமும் இணைய முடியாத திசைகளில் பயணிக்கும். 

Labels:

0கருத்துக்கள்

Post a Comment

<< Home