<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, October 15, 2012

இந்தியாவின் மூடநம்பிக்கை முதலிடத்துக்கு ஐக்கிய அமெரிக்காவால் ஆபத்து

சாமிகள், சாமிமார்கள், சாத்திரங்கள், சடங்குகள், சமயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வடித்து எடுக்கும் மூடநம்பிக்கைகள் மிகுந்த நாடு இந்தியா.  ஆனால் அத்தகையை இந்தியாவில் கூட ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் கூறிய கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டா என்று நினைக்கிறேன்.

தீவர கிறித்தவ, பழமைவாத, வலதுசாரி சட்ட மன்ற உறுப்பினரான போல் ஃபுரோன் (Paul Broun) உயிரியலில் மிக வலுவாக நிறுவப்பட்டுள்ள கரு வளர்ச்சியியல் (embryology), படிவளர்ச்சிக் கோட்பாடு (evolution) ஆகியவற்றையும், அண்டத்தின் தோற்றம் பற்றிய தற்போதைய அறிவியல் கோட்பாடான பெரும் வெடுப்புக் கோட்பாட்டையும் (big bang theory) முற்றிலும் மறுத்து அவை "நகரக் குழியில் இருந்து நேராக எடுத்துவரப்பட்ட பொய்கள்" ("evolution and embryology and the Big Bang Theory, all that is lies straight from the pit of Hell") என்று கூறி உள்ளார்.  மேலும் உலகம் 9000 ஆண்டுகள் வயதுடையது என்றும், இது பைபிளில் குறிப்பிட்டது போன்று 6 நாட்களில் உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.  எந்த ஒரு மதிப்புப் பெற்ற அறிவியலாளரும் ஏற்றுக் கொள்ளமாட்டா, விரிந்துகிடக்கும் ஆதாரங்களுக்கு எதிரான கூற்றுக்கள் இவை.  இதில் என்ன வேடிக்கை என்றால் இவர் வேதியியலில் பட்டம் பெற்றுள்ளார், அரசியலுக்கு வர முதல் மருத்துவராகவும் இருந்துள்ளார்.  இந்தியாவில் மட்டும் இல்லை ஐக்கிய அமெரிக்காவிலும் விலைக்கு பட்டங்கள் பெறலாம் போல் உள்ளது.  இன்னும் மேலாக அறிவியல் தொடர்பாக அரசின் கொள்கைகளை வகுக்கும் அறிவியல் குழுவிலும் இவர் இருக்கிறார்.  அறிவியலை கடவுள்தான் காபாற்ற வேண்டும். 

இது ஒரு விசரனின் உளறல் என்று நீங்கள் நினைத்துவிடலாம். அப்படி இல்லை.  தங்கள் உடல்கள் தொடர்பாக தாமே முடிவெடுப்பதற்கான பெண்களின் உரிமைகளை மறுக்கும்  ரொட் ஏக்கின் (Todd Akin) என்ற இன்னுமொரு தீவர கிறித்தவ, பழமைவாத, வலதுசாரி சட்ட மன்ற உறுப்பினர் கருக்கலைப்பு கற்பழிப்பு போன்ற சில சீரிய சந்தர்ப்பங்களிலாவது அனுமதிக்கப்படலாமா என்ற கேள்விக்கு, நியாபூர்வமாக பெண்கள் கற்பழிக்கப்பட்டால் பெண்கள் கருத்தரிக்க மாட்டார்கள் என்று கருத்துக் கூறினார் ("If it's a legitimate rape, the female body has ways to try to shut that whole thing down.").  இன்னுமொரு விசயம்.  இவரும் அதே அறிவியல் குழுவில் இருகிறார்.  இன்னுமொரு உறுப்பினர் (Randy Neugebauer) ஐ.அ வில் 2011 இல் ஏற்பட்ட பாரிய காலநிலைத் தாக்கங்களை குறைக்க இறைவனிடம் வேண்டி சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினார்.

இவர்கள்தான் இப்படி என்றால், நீங்கள் தவறு,  கிட்டத்தட்ட அரைவாசி ஐக்கிய அமெரிக்க மக்கள் படிவளர்ச்சி தொடக்கம் அண்டவியல் வரை அடிப்படை அறிவியல் கோட்பாடுகளை ஏற்காதவர்களாகவே உள்ளார்கள்.  2012 இல் வேதியியலுக்கும் இயற்பியலுக்கும் ஐக்கிய அமெரிக்கர்களே நோபல் பரிசுகளை வென்றார்கள்.  உலகின் தலை சிறந்த அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழங்களில் பெரும்பாலானவை ஐ.அ விலேயே இன்றும் உள்ளன.  ஆய்வும் புத்தாக்கமும் ஐ.அ வே இன்னும் முன்னிலையில் நிற்கிறது.  இது எப்படிச் சாத்தியமாகிறது? எவ்வாறு அடிப்படை அறிவியலை நம்பாத அமெரிக்கர்கள் அறிவியலில் முன்னிலையில் நிற்கலாம்.  பதில், எளிமையாக இவர்கள் அவர்களில்லை.  அவர்கள் இவர்களில்லை.  ஐ.அ அறிவியலாளர்களில் 90+ மேற்பட்டவர்கள் சமய நம்பிக்கை அற்றவர்கள் (http://www.stephenjaygould.org/ctrl/news/file002.html).  அமெரிக்காவின் மிகப் பெரிய பாக்கியம் அரச பாடசாலைகளில் இந்த பொய்மைகளை படிப்பிக்க முடியாது என்பதுதான்.  ஐக்கிய அமெரிக்க அரசமைப்புச் சட்டம் சமயமும் அரசும் வேறு வேறாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்கிறது (Separation of church and state).  ஐக்கிய அமெரிக்காவை ஒரு முகமாக விமர்சனம் செயுபவர்கள் இந்த வேறுபாடுகளை அவதானிக்க வேண்டும். 

ஆனால் தீவர கிறித்தவ பரப்புரை வேகமாக அமெரிக்க நிலைமையை மாற்றி வருகிறது.  சிறுது சிறிதாக இவர்கள் தமது மூடநம்பிக்கைகளை பாடசாலைகளில் திணித்து வருகிறார்கள்.  இந்த நிலை தொடர்ந்தால் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் அமெரிக்காவின் தலைமை வெகு விரைவில் தகர்க்கப்படும். சிறந்த அறிவுசார் சமூகங்கள் நலிவடைந்து, தேய்து போவதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இசுலாமிய உமாக்கள் தக்லீத் (கண்மூடித்தனமனா பின்பற்றல்) முறையை இறுக்கமாக அறிமுகப்படுத்தி பாரசீக/இசுலாமிய அறிவியலை குட்டிச்சுவராக்கிய வரலாறு அனைவரும் அறிந்ததே.

தீவர கண்மூடித்தனமான சமயத்தின் பரப்புரைகள் இன்று ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் இல்லை, உலகின் பல பாகங்களிலும் கேடுதல் விளைய காரணமாக அமைகின்றன.  இந்தியாவில் ஏற்கனவே நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கிறது. இந்தப் பரப்புரைகள் இவற்றை விரிவாக்கும், வளர்க்கும்.  கவலை வேண்டாம்.  இந்தியா மீண்டும் முதலித்துக்கு வந்துவிடலாம். 

மக்கள் விழிப்புப் பெற வேண்டும்.  இல்லை எனில் அறிவியல் தடைப்படும்.  அறிவியல் தடைப்பட்டால் மனித முன்னேற்றம் தடைப்படும்.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home