<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, January 02, 2012

ரோன் போலின் சுதந்திரவாதம் இனவாதத்தை ஆதரிக்கிறதா?

சுதந்திரவாதமும் வடதுசாரிகளும் பெரும்பாலான சமூகத் தளங்களில் முரண்பட்டும் பொருளாதாரத் தளங்களில் ஒன்றுபட்டும் நிற்பர். ஆனால் யாருக்கு வாக்குப் போடுவது என்று வரும் போது அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தளத்தை அடிப்படையாக வைத்தே தீர்மானிப்பார்கள். இது சுதந்திரவாதத்துக்குள் இருக்கும் ஒரு பெரிய உட்சிக்கல் ஆகும்.

வரும் 2012 ஐக்கிய அமெரிக்க குடியரசுக் கட்சித் தேர்தலுக்கு மக்களாட்சிக் கட்சி சார்பாளர் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக பலர் தீவர வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள் போட்டி போடுகிறார்கள். பொதுவாக இவர்கள் எல்லோரும் மிகவும் கடுமையான மரபுவாதத்தைப் பேணுபவர்கள். கட்டுப்பாடான வரவு செலவை வேண்டுதல், வணிகத்தை எல்லா நிலைகளிலும் ஆதரித்தல், குடிவரவை எதிர்த்தல், கருக்கலைப்பதற்கான பெண்களுக்கான உரிமையை எதிர்த்தல், கிறித்தவ சமய நம்பிக்கையை வெளிப்படுத்தல், ஓருபாலினத்தவர் திருமணத்தை எதிர்த்தல், பெரிய படைத்துறை வரவுசெலவை விரும்புதல், அரச மருத்துவ வசதிகளை எதிர்த்தல், இசுரேலுக்கான கண்மூடிந்த்தனமான ஆதரவு, சூழலியல் சிக்கல்களை மறுத்தல், ஈரானை கட்டுப்படுத்தல், போதைக்கு எதிரான போர் போன்ற நிலைப்பாடுகளை இவர்கள் அனைவரும் வெவ்வேறு தீவரத்தனத்தோடு முன்வைக்கிறார்கள். குடியரசுக் கட்சியின் சுதந்திரவாதப் பிரிவினரால் முன்நிறுத்தப்படும் ரோன் போல் (Ron Paul) இவர்களின் பல கருத்துநிலைகளோடு மாறுபடுகிற போதிலும் சமூகத் தளத்தில் பெரும்பாலும் ஒத்தே போகிறார்.

சுந்திரவாதம் என்பது இயன்றவரை அரசின் அதிகாரமும் பங்கும் குறைவானதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்கிற ஒர் அரசியல் பொருளாதாரக் கோட்பாடு ஆகும். தனியார் சொத்து, தனியார் தெரிவுகள் ஆகியவற்றை இது தீர்க்கமாக வலியுறுத்துகிறது. இந்த கோட்பாட்டு நோக்கில் ரோன் போல் முன்வைக்கும் சில நிலைப்பாடுகள் குடியரசுக் கட்சியில் வேறு யாரும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். ரோப் போல் போதைப் பயன்பாட்டை, பாலியல் தொழில்களை குற்றம்மற்றதாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை உலகின் எல்லா இடங்களில் இருந்தும் வெளியேற வேண்டும், யார் நிலத்தையும் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடாது என்ற்கிறார். போர்களை எதிர்க்கிறார். இவர் அமெரிக்க புலனாய்வுத் துறையையும் நடுவண் வங்கியையும் இல்லாமல் செய்தும், அரச விண்வெளி நிறுவனமான நாசாவையும் விடப்போவதாக கூறி உள்ளார். கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், உலக வணிக அமைப்பில் (WTO) இருந்து ஐக்கிய அமெரிக்கா வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார். இவ்வாறு பல கருத்தியல் அடிப்படையிலான நிலைப்பாடுகளை அவர் கொண்டு உள்ள போதிலும் அவர் பல சமூக சிக்கல்கள் தொடர்பாக கிறித்தவ வலதுசாரிக் கொள்கைகளையே முன்னிறுத்துகிறார்.

பொதுவாக சுதந்திரவாதிகள் தனிமனித வாழ்வில் அரசின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு உடையவர்கள். அந்த ஏரணம் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமைக்கு சார்பாவே அமைக்கிறது. ஆனால் ரோன் போல் கருக்கலைப்பு உரிமையை மறுக்கிறார். ஒருபாலினரின் திருமணத்துக்குக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எதிராகவே இவர் செயற்படுகிறார். இது சுதந்திரவாத நிலைபாட்டிற்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். இவர் கிறித்தவ சமயத்தையும் பண்பாட்டையும் பேணுவதற்கான உரிமைகள் வேண்டும் என்று கூறி, அரச சமய பிரிவினையை எதிர்க்கிறார். இது பிற சமயத்தாரின், சமயம் சாரதவர்களின் உரிமைகளுக்கு எதிராகவும், சுதந்திரவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் அமைகிறது. குடிவரவை எதிர்ப்பதிலும் இவர் சுந்திரவாத கொள்கைகளில் இருந்து விலகிப் போகிறார்.

கறுப்பு மற்று அனைத்தின மக்களும் ஒரே பொது பாடசாலையில் படிக்க, வேலை வாய்ப்புக்களைப் பெற, பொது இடங்களின் சமமாக நடத்தப்பட உரிமைகள் வழங்கிய 1964 குடி உரிமைகள் சட்டத்துக்கு (Civil Rights Act of 1964) எதிரனான இவரின் நிலைப்பாடு ஒரு கோரமான சறுக்கல் ஆகும். ஒரு விதத்தில் சுதந்திரவாத கோட்பாட்டின் படி இது தனிச்சொத்து, தனிமனிதத் தெரிவுகளை ஆதரிப்பது போன்று தெரிந்தாலும், கறுப்பினத்தவர்களின் அடிப்படையை உரிமைகளை எதிர்ப்பதாக இது அமைகிறது. ஒரு கறுப்பின மாணவர் வெள்ளையர்கள் அதிகம் இருக்கும் ஒர் ஊரில் பாடசாலை செல்ல முடியாத நிலையில் வெள்ளையர்களுக்கு இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா, அல்லது அந்த கறுப்பின மாணவருக்கும் தான் கல்வி கற்க இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. இங்கு சுதந்திரவாதக் கோட்பாடு உடைகிறது என்றே படுகிறது.

அரசின் அதிகாரத்துக்கா நாம் பயப்படும் அதே வேளை பிற சமூக அமைப்புகளின் அதிகாரத்தையும் புறக்கணித்து விட முடியாது. சாதி, சமயம், பெரும் வணிகம் என பல்வேறு அதிகார மையங்களை நோக்கியும் நாம் அவதானத்துடம் இருக்க வேண்டும். எங்கு அதிகாரம் இருக்கிறதோ, அது வன்முறையாக தனது இலாபங்களை ஈட்டப் பார்க்கும் என்பதை புரிந்து கொண்டு, அதை கட்டுப்படுத்த தக்க Checks and balances, சட்ட பொருளாதார முறைமைகள் தேவை.

Ron Paul’s quest to undo the party of Lincoln

Why Libertarianism Doesn't Work

Labels: , ,

Monday, December 05, 2011

கனடாவின் அவமானம்: முதற்குடி நாடுகளின் அவலநிலை

உலகின் வளங்கள் மிக்க, செல்வம்மிக்க, ஆற்றல் மிக்க, முதலாம் உலக நாடுகளில் ஒன்று கனடா. இங்கு பல மக்கள் குமுகங்கள் குடிக்க தூய்மையான தண்ணீர் இன்றி. அடிப்படை கழிவகற்றும் தொகுதிகள் இன்றி, கடும் குளில் சூடேற்றும் வழிகள் இன்றி, முறையான வீடுகள், கல்வி, நல அமைப்புகள் இன்றி உள்ளனவென்றால், அது ஏன்.

கனடாவிற்கு ஐரோப்பியர்கள் வர முன்னர், கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ என்று நவீன நாடுகள் எழும் முன்னர் இங்கு நூற்றுக்கணக்கான நாடுகள் இருந்தன. அந்த நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கான மொழியை, பண்பாட்டை, வாழ்முறைகளை, பொருளாதார அரசியல் முறைமைகளைக் கொண்டு இருந்தன. அவர்களுக்கு இடையேயும் சண்டைகள் இருந்தன. எனினும் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இயற்கையோடு இசைந்த, இந்தக் கண்டத்தின் பல்வேறு தீவர சூழ்நிலைகளிலும் வாழும் முறைகளைக் கற்று இருந்தார்கள். ஐரோப்பியர்கள் முதலில் இங்கு வந்த போது, அவர்கள் தப்பிப் பிழைக்க, இங்கு வாழ கற்றுக் கொடுத்தவர்கள் இவர்களே. ஆனால் ஐரோப்பியர்கள் இவர்களை ஏமாற்றினார்கள், அழித்தொழித்தார்கள், அடிமைப்படுத்தினார்கள். பல முதற்குடி நாடுகள் தீர்க்கமாக எதிர்த்தன. அதன் காரணமாக நவீன கனடாவும், நவீன ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இவர்களோடு சில ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் காரணமாக எஞ்சியவர்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் வாழும் படியான ரிசேர்வ் (reserve) முறையை ஏற்படுத்தினார்கள். இந்த ரிசேர்கள் முதற்குடிமக்களின் நாடுகளை பிரித்தன, சிதைத்தன. அவர்களின் மரபுவழியான தொழில்நுட்பங்களை, வாழ்முறைகளை, பொருளாதாரத்தைத் சிதைத்தன. இதற்கு முன்னர் அலைந்துவாழும், வேட்டையாடு குமுகங்களாக இருந்த இவர்கள் இப்போது ஒரே இடத்தில் இருக்கும், நவீன பொருளாதாரத்தில் அல்லது அரசின் தயவில் தங்கி இருக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டார்கள். இந்த பிரதேசங்களை நடுவண் அரசுகள் நேரடியாகக் கட்டுப்படுத்தின. இந்தப் பிரதேசங்களின் குமுகங்கள் தான் இன்று அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றன.

முதற்குடி நாடுகள் பல சொத்து என்ற கருத்துருவைக் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு நிலம் எப்போதும் பொதுவில் தான் இருந்தது. அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த போது, நிலம் எங்கும் எல்லோருக்கும் என்று இருந்த போது இது சிக்கலாக இருக்கவில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் வந்து இவர்களை ஏமாற்றி நிலத்தை தமது சொத்தாக பெற்றுக் கொண்ட பிறகு இவர்களுக்கான நிலம் சுருங்கியது. அவர்களில் நிலங்கள் முன்னர் சுட்டியபடி ரிசேர்வ்களாக மட்டுப்படுத்தப்பட்டன. இன்றுவரை இந்த ரிசேர்வ்களில் யாருக்கும் தனி நிலங்கள் கிடையாது. இதுவே நவீன பொருளாதார முறையில் இவர்களுக்குப் பாதமாகவும் அமைந்துவிடுகிறது. தனிக் குடும்பங்கள் அல்லது மனிதர்கள் தமது நிலத்தை வீட்டை அடமானம் வைக்கவோ, அல்லது அதில் இருந்து வருமானம் பெறவோ முடியாத நிலையில் அதை முன்னேற்றும் உந்தல் இல்லாமல் போகிறது. இவர்கள் ரிசேர்களில் வணிகம் செய்வதற்கான உரிமைகளும் மட்டுப்படுத்தப்பட்டவை ஆகும். தமது மரபு வழித் தொழில்களையும் செய்யவும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவ்வாறு இவர்கள் பொருளாதார முறையில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.

முதற்குடிமக்களின் நாடுகள் கனடாவை ஓர் அதிகார சக்தியாகவே, ஒரு காலனித்துவ நாடாகவே இன்று வரை பார்க்கின்றன. அப்படியே கனடா அவர்களை இன்றுவரை நடத்துகின்றது. ஒவ்வொரு முதற்குடி அல்லாத கனடியருக்கும் கிடைக்கும் கல்வி, நலம், பாதுகாப்பு இவர்களுக்கு இல்லை. இவர்களின் கல்வி நிலை படு மோசமானது, இவர்கள் வாழ்நாள் எதிர்பார்ப்பு குறைவானது, தற்கொலை விகிதம் அதிகமானது, குடி-போதை-ஏழ்மை மிக அதிகம். இந்த சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் முதற்குடிமக்களே காரணம், அவர்களின் அரசியல் முறை அல்லது மேலாண்மை முறை காரணம் என்பது தற்போது அரசாங்கம் கூறும் சாட்டு ஆகும். அது ஒரு முக்கிய காரணம் ஆக இருந்தாலும் அடிப்படைக் காரணம் என்பது இந்த முதற்குடி நாடுகளில் தன்னாட்சி உரிமை பற்றியது,அவர்கள் தமது அரசியல் பொருளாதார முடிவுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிமைகள் பற்றியது. இது திட்டமிட்டு இவர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இன்று கனடா ஒரு செல்வ நாடாக இருக்கின்றது என்றால், அது முதற்குடிமக்களின், அவர்களின் வளங்களின் சுரண்டலில் அமைந்தது என்றால் அது மிகை ஆகாது. அந்தச் சுரண்டல் தொடர வேண்டும் என்றால், அவர்கள் இன்னும் பலம் இல்லாதவர்கள் ஆக தொடர்வது அவசியம் ஆகிறது. அதனால் தான் அந்தக் குமுகங்கள் வளர்வதைப் பற்றி கனடிய அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.

கனடாவின் அதிகாரப் படிநிலையில் அடிநிலையில் இந்த மக்கள் இருக்கிறார்கள். அண்மையில் குடியேறிய தமிழர்கள் போன்றோரின் சராசரி வாழ்கைத் தரம் கூட இவர்களின் வாழ்கைத் தரத்தை விட பல மடங்குகள் உயர்ந்தது. நாம் கனடா எவ்வளவு ஒரு பல்லினப் பண்பாட்டு சொர்க்கம் ஆக காட்ட முயன்றாலும், இந்த அதிகாரப் படிநிலை உள்ளது என்பது உண்மை. உயர்வில் யூதர்கள், பிரித்தானிய வெள்ளையர்கள், பிரெஞ்சுக் காரர்கள், இடையில் பிற ஐரோப்பியர்கள், அதன் பின் ஆசியர்கள், கறுப்பர்கள், முதற்குடிமக்கள். குடிவரவாளர்களைப் பொறுத்த வரையில் நாம் இதை ஏற்றுக் கொள்கிறோம். படித்தால், உழைத்தால் உயராலாம் என்ற நம்பிக்கை, அதற்கான வாய்ப்புக்கள் எமக்கு உள்ளன. ஆனால் முதற்குடிமக்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. இது அவர்களின் தேசம், அவர்களின் வளங்கள். ஆனால் பிறர் எல்லோரையும் விட வசதிகளும் வாய்ப்புக்களும் அற்றவர்களாக முதற்குடி நாடுகள் உள்ளன.

ஒரு நாடு, அல்லது நாடுகள் தமது மொழியை, பண்பாட்டை, பொருளாதார அரசியல் முறைமைகளை இழக்கும் போது அவர்களுக்கு கிட்டும் துன்பத்தை, அவலத்தை வட தென் ஆப்பிரிக்க உருசிய சீன முதற்குடிமக்களையும், ஈழத் தமிழர்களையும் பார்த்து நாம் உணர முடியும். இவர்களுக்கு நாம் உணர்வுத் தோழமையை, ஆதரவுவை வழங்க வேண்டும். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படும் வண்ணம், வாழ்நிலைகள் உயரும் வண்ணம் நாம் செயற்பட வேண்டும்.

Labels: , ,

Sunday, November 06, 2011

குடிவரவை எதிர்க்கும் குடிவரவாளர்கள்

கனடாவில் குடிவரவை (immigration) எதிப்பவர்களில் அண்மையில் குடிவந்தவர்கள் கணிசமானவர்கள். கடந்த வெள்ளி சி.பி.சி காலை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ஓர் உரையாடலில், ஒரு தெற்காசியர் தான் குடிவரவை எதிர்ப்பதாகவும், ஏன் என்றால் தனக்குத்தான் தெரியுமாம் எப்படிப்பட்டவர்கள் இங்கு வருவார்கள் என்றும் கூறினார். குடிவந்து சற்று நிலைபெற்ற பின்னர், இத்தகைய கருத்து மாற்றத்தை நன்கு அவதானிக்கலாம்.

கனடாவைப் பொறுத்த வரை, அதன் அளவுக்கும் செல்வத்துக்கும் திட்டமிட்ட முறையில் செய்தால் இப்பொழுது அனுமதிப்பதை விட பல மடங்கு குடிவரவாளர்களை ஏற்றுக் கொள்ளலாம். எல்லோருக்கும் உச்ச வாழ்தரம் கிடைக்காது, இருப்பவர்களின் வாழ்தரம் சற்று மோசமடையலாம், ஆனால் பல மில்லியன் மக்கள் பலன் பெறுவார்கள். இதற்கான எதிர்ப்பை நீண்ட காலம் இங்கு இருப்பவர்கள் செய்தால், அதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். ஆனால் இப்போ வந்தவர்கள் ஏன் செய்கிறார்கள்.

இதற்கான சரியாக பதில் தெரியவில்லை. ஒரு காரணம் அதிகப் பேர் வந்தால், பொதுச் சமூகம் குடிவரவாளர்களை தீர்க்கமாக எதிர்க்கும், அதனால் தாமும் பாதிக்கப்படுவர் என்பது. இன்னொரு காரணம் இனவாதம். குறிப்பாக தெற்காசியர்கள், தமிழர்கள் கறுப்பின மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களைக் கொண்டவர்கள். அவர்களை காப்புலிகள், காடையர்கள் என்று ஒதுக்குவார்கள். இப்போதைய உலகச் சூழலில் கறுப்பின மக்கள் கணிசமான அளவிற்கு கனடாவிற்கு வருகிறார்கள்.

நாம் இங்கெ வந்து நாட்டை பாதிக்கும் வகையில் சில வகைகளில் நடந்து கொள்கிறோம் என்பது உண்மைதான். ஊழலுக்கு உடந்தை செய்கிறோம். சாதி, காதல் எதிர்ப்பு, சமயம் போன்ற எமது வறண்ட பண்பாட்டு கட்டமைப்புக்களை இங்கும் நிறுவுகிறோம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் கனடாவின் பொருளாதரத்திற்கும், அதன் நலத்துக்கு நல்லதே செய்கிறோம் எனலாம். எல்லோரும் சுதந்திரத்துடன், அவரவர் வேலையைப் பார்த்தபடி, குறை நிறைகளுடன் வாழ்க்கையை ஓட்டுவது, அதையே கனடா வழங்கும், சொர்க்கத்தை அல்ல. கடும் குளிரையும், கடின உழைப்பையும் தாங்க முன்வரும் அனைவரையும் இயன்றவரை கனடா ஏற்றுக் கொள்ளும் ஒரு குடிவரவுக் கொள்கைக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

Labels: ,

Friday, November 04, 2011

இலங்கையில் கொண்டுவரப்படும் நிலங்கள்/வணிகங்கள் அரசுடைமைக்கப்படும் சட்டம்

இலங்கை சமவுடமை, பொதுவுடமை வாதிகளுக்கு ஒரு பெரிய வெற்றி. எல்லாச் சொத்துக்களும் பொதுவுடமையாக்கப்பட வேண்டும் என்ற சமவுடைமைக் கொள்கையை இலங்கையின் சமவுடமை அரசு நிறைவேற்ற தொடங்கி உள்ளது. இலங்கைப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற ராசபக்ச குடும்பம் அங்கு வெற்றிகரமாக செயற்படாத அல்லது பயன்படுத்தப்படாத வணிகங்களையும் நிலங்களையும் அரசுடமையாக்கி உள்ளார்கள். இந்தச் சட்டத்தை முதலாளித்துவம் நசுக்க முடியாதவாறு ரகசியமாக உருவாக்கி, உயர் நீதி மன்றத்திலும் அனுமதி பெற்றாச்சு. ஐலண்ட் போன்ற வலதுசாரிப் பத்திரிகைகள் கொக்கரித்தாலும், இலங்கையின் பொதுவுடமைச் சிங்கம் ராசபக்ச நாட்டு நலன் கருதி இதைச் செயற்படுத்தி உள்ளார்.

இதுவரை 37 வணிகங்களும் நிலங்களும் இவ்வாறு அரசுடமைமையாக்கப்பட்டது என்று கூறினாலும், தமிழர்களின் சொத்துக்களை முதலே பட்டியல் போட்டாச்சு. அவற்றை இந்தச் சட்டத்துக்கு முன்னாலேயே எடுத்தாச்சு. இப்ப சிங்கள் ஆக்களிண்ட சில சொத்துக்களையும் நாட்டின் நலன் கருதி பொதுவுடமை ஆக்கி ஆச்சு. அவற்றை நாட்டுக்காக ராசபக்ச குடும்பம் திறமையாகப் பயன்படுத்தும். இது பற்றித்தான் ஐலண் பத்திரிகை சற்றுக் கவலை கொண்டு உள்ளது.

இலங்கை அரசு மேலும் மேலும் பலம் பெற வேண்டும். கல்வி, மருத்துவம், ஊடகம், வணிகம், பாதுகாப்பு, சமயம் என எல்லா விடயங்களையும் அரசே எல்லோருக்காகவும் சமமாக சரியாகப் பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தூரம் இல்லை. இலங்கையில் மலர்கிறது, சோவியர்கள் கனவு கண்ட பொதுவுடமைச் சொர்க்கம்.

Labels: , ,

Sunday, October 16, 2011

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 4 - நிதித்துறை, நிதிமயமாக்கம், சூதாட்டம்

முதலாளித்துவத்துக்கும் சந்தைப் பொருளாதாரத்துக்கும் அடிப்படையான ஒரு முறைமை வங்கிகளும் நிதித்துறையும் ஆகும். பண்டமாற்ற்றில் இருந்து பணத்துக்கு மாறியதே நிதிமயமாக்கத்தின் முதல் கட்டம் எனலாம். பணமும், வங்கிகளும் பணத்தின் ஊடான பண்டமாற்றை, பொருட் பாதுகாப்பை, முதலீட்டை ஏதுவாக்கின. பாதுகாப்புக்காக/காப்புறுதிக்காக, பண்டமாற்று வசதிக்காக மக்கள்/வணிகங்கள் வங்கிகளிடம் பணத்தைக் கொண்டு இருப்புச் செய்கிறார்கள். இருப்புச் செய்த எல்லோரும் ஒரே சமயத்தில் தமது பணத்தை கேக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வங்கிகள் உற்பத்தியாளர்களுக்கு, புத்தாக்கர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். இந்த வட்டியே வங்கிகள் பெறும் வருமானத்தில் ஒரு முக்கிய பகுதி.

நவீன சமூகத்துக்கு வணிகத்துக்கு வங்கிகளும் நிதித்துறையும் அடிப்படையானது. ஆனால் சில வங்கிகளும் வணிகங்களும் இந்த முறைமையை தமக்கு பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வகையான முறையில் அமைத்துக் கொண்டனர்.

நிதிமயமாக்கத்தின் ஒரு ஆபத்தான பகுதி இருப்பை மிகையாக நெம்பவைத்தல் (overleverage) ஆகும். 1000 ரூபாய் முதல் வைத்திருக்கும் ஒரு வங்கியில் 10000 ரூபாய்களை 100 பேர் இருப்பு வைத்தால், அந்த நூறு பேரில் பத்துப் பேர் 1000 வரை ஒரே நேரத்தில் கேக்கலாம் என்று எதிர் பார்த்து, மிகுதி 9000 யை கடனாகக் கொடுக்கலாம். வங்கிகள் 9000 என்பதை விட அதைவிட பல 5-10 மடங்கு வரை இருப்பை முதலாக நெம்பு வைத்து பணத்தை கடன் கொடுக்கும். இவ்வாறு நெம்புவைத்து பெரும் இலாபம் ஈட்டு நோக்கில் இந்த வங்கிகள் மிக மோசமான கடன்களையும் வழிப்பொருட்களையும் (derivatives) வழங்கின அல்லது வாங்கின. பொருளாதாரம் சரிந்த போது இந்த வங்கிகள் கடன்களை திருப்ப முடியாத நிலைக்குப் போகின. இதனால் இருப்பு வைத்தவர்களின் நிலையும் சிக்கலானது. இவ்வாறு இருப்பு வைத்த பொது மக்களும், கடன்களை முதலீடாக தேவைப்படும் வணிகங்களும் பணம் பெற முடியாமல் போன போது ஐக்கிய அமெரிக்க அரசு அத்தகைய சில வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பிணை எடுத்தல் அவசியமானது. 2008 இருந்து இப்போது தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகள் மிகையாக நெம்புவைத்தது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சந்தையில் ஒரு முக்கிய சேவையைச் செய்கின்றன, எனினும் ஒரு பொருளாதாரத்தின் அடிப்படை உற்பத்தி ஆகும். ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலும் உலகென்கும் இந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இலாபம் ஈட்டும் முதன்மை வழிகளாக மாறிவிட்டன. நிதி நிறுவனங்கள் பல்வேறு நிதிக் கருவிகளை உற்பத்தி செய்துள்ளன. கடன், வட்டி, பங்கு மட்டுமல்ல futures, options, swaps, Asset-backed security என்று பல வகைக் கருவிகள். 1970 களில் ஐ.அ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ)13.1% வீதமாக இருந்த பங்குச் சந்தை 2000 களில் 140% மேல் ஆனது.

அடிப்படையில் அமெரிக்க முதலாளித்துவம் ஒரு சூதாட்டம் ஆக மாறிவிட்டது என்பது விமர்சகர்களின் கருத்து. அரசை அவர்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசும் அதற்கு உடந்தையாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.

Labels:

Saturday, October 15, 2011

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 3 - அரச உதவியில் நகரும் அரைவாசி அமெரிக்கர்களின் வாழ்கை

தற்சார்பை, தனே செய்வதை, தனே தன்னை உருவாக்கிக் கொள்வதைப் வேறு எந்த நாட்டவர்களையும் விட அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஆனால் அண்மைக் காலமாக நிசம் வேறு ஒரு தரவை முன்வைக்கிறது. 2011 இல் ஏறக்குறைய 48.5% அமெரிக்கர்கள் அரச நல உதவி பெற்று வாழ்வை நகர்த்துகிறார்கள். இது எல்லோரும் பயன்படுத்தும் வீதி, பாதுகாப்பு, பூங்கா போன்ற சேவைகள் அல்ல. மாற்றாக வசதி குறைந்தவர்களுக்கான உதவிகள் ஆகும். அதாவது தொழில் இல்லாமைக்கான பண உதவி, உணவு உதவி, வீட்டு உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளை 48.5% ஆனோர் பெறுகிறார்கள். ஒரு விதத்தில் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தை பெரும்பான்மை மக்கள் உணர்வதைத் தடுக்க இந்த உதவிகள் இன்றியமையாமல் அமையலாம். ஆனால் அமெரிக்கா போதிக்கும் முதலாளித்துவ கொள்கைக்கும் அவர்களின் நிசத்துக்கும் இங்கு ஓரு பெரும் இடைவெளி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இலவசமாக தொலைக்காட்சி வழங்குவது வாக்குக்களைப் பெறுவதற்கான விசமத்தனமாகத் தெரியலாம், ஆனால் கணினிகளை வழங்குவதோ அல்லது பள்ளிக்கூடத்தில் ஒரு வேளை உணவு வழங்குவதே அப்படியல்ல. ஏழைகளைப் பொறுத்தவரை வாழ்வை நகர்த முன்னேற்றா அவர்களுக்குத் தேவையான ஒரு உதவி. அமெரிக்காவை விட முதலாளித்துவ நாடு இந்தியாதான். ஏன் என்றால் அமெரிக்காவில் இருப்பதைப் போல ஒரு சிறு பங்குகூட அரச உதவிகள் அங்கு இல்லை.

Labels:

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 2 - தொழில் வெளியேற்றம்

ஐக்கிய அமெரிக்காவில் இடதுசாரிகள் என்றாலும் வலதுசாரிகள் என்றாலும் இப்பொழுது எழுப்பும் கோசம் அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்பதாகும். முன்னர் எந்தவித உயர் கல்வியும் இல்லாமல் கார், கணினி அல்லது பிற இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொகுப்புவரிசையில் வேலை செய்யும் ஒருவரால் நடுத்தர வர்க்க வாழ்கைத் தரத்தை அடைய முடியும். ஆனால் அந்தத் தொழில்களில் பெரும்பாலனவை சீனாவிற்கும், கிழக்காசியாவிற்கும், இந்தியாவிற்கும் போய் விட்டன.

உலகின் தொழிற்சாலையாக இருந்த ஐக்கிய அமெரிக்கா இன்று உலகின் சந்தைப்படுத்தல் கடையாக மாறி உள்ளது. இப்போதும் அங்கேயே அதிக புத்தாக்கம் நிகழ்கிறது. வடிவமைப்புக்கள் அங்கேயே நடக்கிறது. ஆனால் அதற்குத் தேவையான பணியாளர்கள் அமெரிக்க பணியார்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. அந்தப் பணிகளையும் இப்போது சீனாவும், இந்தியாவும் கைவைக்கத் தொடங்கி விட்டன.

உலகமயமாதல் என்பது முதல் மட்டையும் அல்லாமல் தொழில்களையும், தொற்சாலைகளையும் அதிக இலாபம் நோக்கி நகர்த்தி விடுகிறது. இப்போது இது ஐக்கிய அமெரிக்க முதலாளித்துவ கொள்கையில் இது ஒரு பெரும் உடைப்பாக பெருக்கெடுக்கிறது. ஒரு புறத்தில் ஐக்கிய அமெரிக்க பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தொழில்களை வெளியே நகர்த்தி பெரும் இலாபம் ஈட்டுகின்றன. மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்க நடுத்தர வர்க்கம் இல்லாமல் போகிறது.

தொழில்கள் வெளியேறாத படி குறைந்த வரியும், தகுந்த வணிகச் சூழல்களையும் உருவாக்க வேண்டும் என்று சில தேனீர் கட்சியினர் கூறினாலும், இரு கட்சிகளும் தொழில் வெளியேற்றத்தை எதிர்க்கின்றன. அமெரிக்கா போதிக்கும் திறந்த சந்தை இதுவல்ல. திறந்த சந்தையில் பிறர் சற்று போட்டி போடத் தொடங்கியவுடன் அவர்கள் விதிகளை மாற்றப் பார்க்கிறார்கள்.

Labels:

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 1 - வேளாண்மை மானியங்கள்

ஐக்கிய அமெரிக்கா சுமார் 180 பில்லியன் வரையான டொலர்களை தனது விவசாயிகளுக்கும், வணிக வேளாண் நிறுவனங்களுக்கும் மானியமாக வழங்குகிறது. எந்தவித பொருளாதாரத் தேவையும் இல்லாமல் கூட நேரடி மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 2-3 % மக்கள் மட்டுமே வேளாண்மையைத் தங்கி இருக்கிறார்கள். அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த வேளாண் மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் பலவும் இதையே செய்கின்றன.

ஒரு நாட்டின் உணவு மூலம் அந்த நாட்டின் சமூகப் பொருளாதார நலனுக்கு அடிப்படையானது. ஆகவே அவர்கள் தங்கள் வேளாண்மையை தக்க வைக்கும் நடவடிக்கைகள் மிக உகந்ததாகப் படலாம். ஆனால் இந்தக் கொள்கை அவர்கள் முன்வைக்கும் முன்னெடுக்கும் முதலாளித்துவம் அல்லது திறந்த சந்தைக் கொள்கைக்கு எதிரானது. மேலாக இது ஆப்பிரிக்க மற்றும் வளர்ந்துவரும் நாடுகளையே பெரிந்தும் பாதிக்கிறது.

உணவை உற்பத்தி செய்யும் ஒரு ஆப்பிரிக்க அல்லது இந்திய விவசாயி மானியம் பெறும் அமெரிக்க விவசாயியோடு போட்டி போட முடியாது. அமெரிக்க விவசாயி பல இந்திரங்களைப் பயன்படுத்தி அதிகமாக உற்பத்தி செய்து அதிக பணத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான். அதனால் சந்தையில் பொருட்கள் கூடி விலையைச் சரிக்கிறது. எனவே இந்திய அல்லது வளர்முக நாடுகளின் விவசாயிகள் தங்கள் உற்பத்திகாக தகுந்த பெறுமதியைப் பெறமுடியாமல் போகிறார்கள். ஆப்பிரிக்க இந்திய விவசாயிகளின் தொழில்நுட்ப வீச்சுக் குறைவு என்று கூறுவது உண்மையல்ல. உலக ஒழுங்கு முறையே அவர்களுக்கு எதிராக உள்ளது.

முன்னர் சுட்டியபடி 2-3 % அமெரிக்க மக்களே வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்போது குடும்ப வயல்கள் போய், கார்ப்பிரட் வயல்களே பெருகி உள்ளன. எனவே மானியம் அந்த வணிக நிறுவனங்களுக்கே பெரிதும் போகிறது. அவர்களுக்காக இந்தியாவின், ஆப்பிரிக்காவின், பிற வளர்முக நாடுகளின் பெரும்பான்மை மக்களின் நலத்தை பாதிக்கும் கொள்கையே அமெரிக்காவினது. இந்தக் கொள்கை அமெரிக்காவின் அனைத்து கட்சிகளாலும் முன்னெடுக்கப்படுவதுதான்.

எனவே அமெரிக்காவின் போதனைகளுக்கும் நிசத்துக்கும் பெரும் இடைவெளி உண்டு. உண்மையான திறந்த சந்தை இதுவல்ல. உண்மையான திறந்த சந்தை சாத்தியமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

Labels:

Friday, October 14, 2011

ரொறன்ரோ ஆக்கிரமிப்பு (Occupy Toronto Market Exchange) - 7 கோரிக்கைகள்

வோல் இசுரீட் ஆக்கிரமிப்பு ஒரு மாத காலமாகத் தொடர்கிறது. அவர்களுக்கு ஆதரவாகவும் தமது கோரிக்கைகளை முன்வைத்தும் ரொறன்ரோ பே வீதியை ஆக்கிரமிப்புச் செய்யவிருப்பதாக சில குழுக்கள் கூறுகின்றன. பொதுவா இடதுசாரிச் சார்புள்ள இவர்கள் இதை ஏன் செய்கிறார்கள், என்ன மாற்றுக்களை முன்வைக்கிறார்கள், என்ன விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதில் அவர்கள் உட்பட எல்லோருக்கும் குழப்பம் உண்டு.

உலக பொருளாதாரச் சிக்கல்களுக்கு களவும் குற்றமும் பண்ணும் வணிக நிறுவங்கள் ஒரு முக்கிய காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நிதித் துறையை பல வழிகளால் ஒரு சூதாட்டத் துறையாக மாற்றி மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள். அவர்களின் முன்னால் அரசுகளும் பலம் இல்லாதவை என்று இவர்கள் கருதுகிறார்கள். அதை நிவர்த்தி செய்வதற்காக 7 முதன்மைக் கோரிக்கைகளை இவர்கள் முன்வைக்கிறார்கள். அவை யானவை:

1) வணிக நிறுவனங்களுக்கும்/வங்கிகளுக்கும் அரசுகளுக்கும் இடையேயான உள் கூட்டை முடி. தேர்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் மக்களின் (99%) நலனுகாகப் பாடுபட வேண்டும், நன்கொடை கொடுத்த பணக்காரர்களின் (1%) நலன்களுக்கு மட்டு அல்ல.
1) End the Collusion Between Government and Large Corporations/Banks, So That Our Elected Leaders Are Actually Representing the Interests of the People (the 99%) and Not Just Their Rich Donors (the 1%).

2) மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்த மோசடிகளைச் செய்தத வோல் இசுரீட் மற்றும் உயர் செயலதிகாரிகளை விசாரி.
2) Investigate Wall Street and Hold Senior Executives Accountable for the Destruction in Wealth that has Devastated Millions of People.

3) பண உருவாக்கும் உரிமையை ஐக்கிய அமெரிக்க நிதித் துறையிடம் திருப்பிக் கொடுக்கவும், நியாமான பண முறைக்கு திரும்பவும்.
3) Return the Power of Coining Money to the U.S. Treasury and Return to Sound Money

4) வங்கிகளின் அளவையும் வீச்சையும் கட்டுப்படுத்து. மீண்டும் ஒன்றும் வரி கட்டுபவர்களால் பிணை எடுக்கப்பட வேண்டிய தோற்கப்பட விட முடியாத நிலைக்கு வரக் கூடாது.
4) Limit the Size, Scope and Power of Banks so that None are Ever Again “Too Big to Fail” and in Need to Taxpayer Bailouts

5) வணிக நிறுவனங்களுக்கு மனிதத் தகுதி குடுக்கும் சட்டத்தை நீக்கும்.
5) Eliminate “Personhood” (Santa Clara County v. Southern Pacific Railroad Company) Legal Status for Corporations

6) நாட்டுப்பற்றாளர் சட்டத்தை நீக்கு. போதை மருந்துக்கு எதிரான போரை நிறுத்து. மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்புச் செய்.
6) Repeal the Patriot Act, End the War on Drugs and Protect Civil Liberties

7) எல்லா வல்லரசுப் போர்களையும் நிறுத்து. படைவீரர்களை வீட்டுக் கொண்டுவா. படைத்துறை வரவுசெலவை வெட்டு. தாய்நாட்டை பாதுகாப்பதை மட்டும் படைத்துறையின் பொறுப்பாகக் கொள்.
7) End All Imperial Wars of Aggression, Bring the Troops Home from All Countries, Cut the Military Budget and Limit The Military Role to Protection of the Homeland

Labels: ,

Thursday, September 29, 2011

சதாவின் கடிதம்: வன்முறைப் போராட்ட வழிமுறையில் சிதைக்கப்பட்டவர்கள்

ஈழப் போராட்டத்தில் 1970 களின் இறுதிகளுக்குப் பின்பு அறவழிப் போராட்ட வழிமுறைகள் எவையும் உறுதியான முறையில் நேர்மையான முறையில் யாராலும் முன்னிறுத்தப்படவில்லை. இயக்கங்களாலும் சரி, அவற்றை வளர்த்த இந்திய உளவு நிறுவனம் ஆனாலும் சரி, அரசியல் கட்சிகள் ஆனாலும் சரி அறவழிப் போராட்ட வழிமுறைகளைப் பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக வன்முறைக்குப் பதில் வன்முறை என்று நாம் ஈழத் தமிழர் இனப்படுகொலை வரைக்கும் தள்ளப்பட்டோம்.

அந்த வன்முறைப் போராட்டத்தின் உச்ச வடிவம் விடுதலைப் புலிகளே. விடுதலைப் புலிகளின் அடிப்படைக் கருத்தியல் என்பது வன்முறையிலானது, அதிகாரத்திலானது. அதிகாரத்தால் எதையும் வெல்லாம் என்பதுவே அது. இந்த வன்முறையும், அதிகாரமும் இலங்கை அரசின் கோரத்தை எதிர்த்த போது தமிழ் மக்கள் அவர்களோடு அணி திரண்டார்கள். அதுவே உள்ளே திரும்பிய போது விளைந்ததே சகோதர இயக்கப் படுகொலைகள், சர்வதிகார அடக்குமுறைகள். இந்த வகையில் பெரும்பாலான மற்ற இயக்கங்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளை விட பல மடங்கு மோசமானவர்கள், சற்றும் ஒழுக்கம் அற்றவர்கள்.

இந்த வன்முறைப் போராட்டத்தின் உரமாக 25000 மேற்பட்ட போராளிகளின் உயிர்கள் கொடுக்கப்பட்டன. 11 500 வரையான பேர் இலங்கைப் படைத்துறையிடனரிடம் சரணடைந்தார்கள். இவர்களின் கணிசமானவர்கள் மிகக் கொடுமையான தண்டனைகளுக்குப் பின்பு விடுவிக்கப் பட்டுள்ளார்கள். மேலும் பெருந்தொகையினர் இன்னும் தண்டனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவது அனுபவிப்பார்கள். விடுவிக்கப் பட்ட போராளிகளை யாழ் தமிழ்ச் சமூகம் மிகக் கேவலமாக நடத்துகிறது. எந்தவொரு நாடோ, எந்தவொரு மக்கள் சமூகமோ தமது போராளிகளை ஒருபோது இழிவுபடுத்தாது. தலைமைகள் எந்தளவு பிழையாக இருந்தாலும், சுத்த போராளிகளை இழிவுபடுத்துவது போல கொடுமை எதுவும் இல்லை. ஒரு வகையில் இந்தப் போராளிகள் மறக்கப்பட வேண்டியவர்களாக, மறைக்கப்படவேண்டியவர்களாக மாறிவிட்டனர்.

சதாவும் இப்படிப் பட்ட ஒரு போராளிதான். ஆனால் இவன் ஈழத்துக்கு அப்பாலேயே செயற்பட்டவன். இங்கு (ரொறன்ரோவில்) தமிழ் இளையோர் அமைப்பின் தலைவராக செயற்பட்டவன். இவனை வலை விரித்து இலங்கை அரசும் ஐ.அ உளவுத்துறையும் கைதுசெய்து 25 ஆண்டுகள் சிறைவைத்துள்ளன. கனடாவில் ஒரு பெரும் தமிழ்ச் சமூகம் இருந்தும், இவனது கைதும் சிறையும் இங்கு யாரையும் உசுப்பவில்லை. அண்மையில் அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இங்குள்ள "தலைமைகளால்" தான் பயன்படுத்தப் பட்டதாகவும், தமக்குள் வெறுப்பு விதைக்ப் பட்டதாகவும் கூறியுள்ளார். நடந்த பல சந்திப்புக்களில் சுமூகமான எந்த தீர்வுக்கும் இடம் கொடுக்கப் படவில்லை என்றும், வெற்றி என்ற இலக்கைக் காட்டி உணர்வை உசுப்பி இளையவர்களை தலைமைகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் கூறுகிறார். இவரது மதிப்பீடுகள் மிகச் சரி என்றே கருதுகிறேன். மேலும், இளையவர்கள் வன்முறையில் இருந்து விலக வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளின் கருத்தியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

அவரின் கடிதத்தின் கனத்தை, அதன் பின் இருக்கும் வலியை உணர முடிகிறது. ஆனால் ஒரு முக்கிய இடத்தில் வேறுபடுகிறேன். இந்தக் கடிதத்தில் அடிமைகள் பயன்படுத்திய வன்முறையைப் பற்றி மட்டும் குறிப்படுகிறார், அடக்குமுறையாளர்கள் பயன்படுத்திய, பயன்படுத்தும் வன்முறையையும், கருத்தியலையும், வெறுப்பையும் பற்றிக் குறிப்பிடவில்லை. "சமதானமும் இணக்கப்பாடும்" சமாதானமும் அபிவிருத்தியும் என்ற இலங்கையின் தற்போதைய அரசியல் கோசங்களைக் குறிப்பிடுகிறார், ஆனால் உண்மை, உரிமைகள், விடுதலை பற்றிக் குறிப்பிடவில்லை. உண்மை இல்லாத இணக்கப்பாடு என்பது போலியானது. விடுதலை, தமிழ் மக்களின் நியாமான உரிமைகள் என்பவை விடுதலைப் புலிகளோடு முடிந்துவிடுபவை அல்ல. தோற்றவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் மீது எல்லா குற்றங்களையும் சுமத்துவது என்பது தீர்வு அல்ல. தமிழ் மக்களின் போராட்டங்களுக்கான காரணங்கள் அனைத்தும் இன்றும் நிலைத்து நிற்பவை. இலங்கைப் பத்திரிகைகளில் சில தமிழ் மக்களின் கருத்துமாற்றங்கள் பற்றி நேர்காணல்கள் முன்வைக்கும் சிங்கள பேரினவாதப் பத்திரிகைகள் எவைதானும் ஒரு சிங்களப் போரினவாதியின் கருத்துமாற்றம் பற்றியும் இன்னும் ஒரு நேர்காணலைத்தானும் வெளியிடவில்லை.

நாம் சதாவின் கடிதத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறுப்பு எமக்குத் தேவையில்லை. வன்முறை எமக்குத் தேவையில்லை. நாம் சிந்தித்து
செயற்படவேண்டும்.

எமது கடந்த காலத்தை ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு நேர்மையான போராட்ட வழிமுறையை நாம் கட்டமைக்க வேண்டும். வன்முறையற்ற, மனித உரிமைகளை மதிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அந்த விழுமியங்களின் அடிப்படையிலான போராட்ட வழிமுறைகளே எமக்குத் தேவை.

சதா படித்த பள்ளியில் நான் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றவன். அவன் ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரன். நன்றாக கணக்குச் செய்வான். தமிழ் மீது அவனுக்கு ஒர் ஈர்ப்பு. இவ்வாறுதான் அவனைப் பற்றிய நினைவுகள் என்னிடம் உள்ளன. அவன் தனது இளமையை சிறையில் துலைப்பது என்பது என்னை இடிக்கும் ஒரு நிலைமை.

ஒடுக்குமுறைக்கும், அடிமைத்தனதுக்கு எதிராக போராட்டாமல் இருப்பதை விட எந்த வழியாலும் எதிர்ப்பது நன்று. ஆனால் அறவழிப் போராட்டமே மனித இனத்துக்கு சார்பானது. அறவழிப் போராட்டம் என்றால் இலகுவானது, வேகமானது, இழப்புகள் இல்லாதது என்பது பொய். அங்கேயேயும் இழப்புக்களும் அர்ப்பணிப்புக்களும் அதிகம் தேவைப்படும். ஆனால் நாம் எட்ட நினைக்கும் இலக்குகளுக்கும் அதற்கான வழிமுறைகளுக்கும் அங்கே முரண்ப்பாடு இருக்காது. அவ்வாறு என்றும் இருக்கக் கூடாது.

Labels: , ,