<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Wednesday, November 28, 2012

யாழ் பல்கலையில் உணர்தலும் துணிதலும்

போராளிகளை, போர்வீரர்களை மதித்தல் நினைவுகூறல் என்பது அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாலானது.  இதுவே எல்லா நாடுகளிலும், எல்லாச் சமூகங்களிலும் உள்ள வழமை.  உணர்வுகளாலும் இலட்சியங்களாலும் மட்டுமே உந்தப்பட்டு உயிரையும் உடல் உறுப்புகளையும் மனங்களையும் இழந்து நிற்பவர்களுக்கு நாம் செய்யக் கூடிய மிகச் சொற்பமான கடமை இதுவேயாகும். 

உணர்தல், சிந்தித்தல், நினைவுகூறுதல் ஆகியன அடிப்படை மனித இயல்புகள், அடிப்படை மனித உரிமைகள்.  சிந்திப்பதற்கான சுதந்திரம் (freedom of thought), பேச்சுரிமை (freedom of speech), கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் (freedom of expression), ஊடகச் சுதந்திரம் (freedom of the press), கூடல் சுதந்திரம் (freedom of assembly) என்று அடிக்கிக் கொண்டே போகும் மனித உரிமைக் கூற்றுக்கள் இந்த உரிமைகளை உறுதிப்படுத்துகின்றன.  இதை மறுப்பது என்பது ஒருவர் மனிதராக இருப்பதை மறுப்பது ஆகும்.  இன்றைய இலங்கையில் தமிழரின் நிலை இதுவே ஆகும். 

ஒரு புறம் மனித உரிமைகளைப் பேண தாம் பல நடவடிக்கைகளை எடுப்பது போலக் காட்டிக் கொள்ளும் சிங்களப் பேரினவாத அரசு, மறுபுறம் அந்த உரிமைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறியளவிலான செயற்பாடுகளைக் கூட அனுமதிப்பதில்லை.  மிகக் கொடுமையாக நீ என்ன உணர்கிறாய் சிந்திக்கிறாய் என்ற நிலை வரை அவர்கள் மக்களை வன்முறையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.  மிகப் பெரும் தமிழின இனப்படுகொலைக்குப் பின்பு, முற்றும் முழுதான படைத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈழத்தில் இருந்து அரசின் இக் கொடும் கட்டுப்பாடுகளை மீறி யாருக்கும் குரல் கொடுக்கத் துணிவு வரும் என்று யாரும் எண்ணி இருக்க மாட்டார்கள்.  அதனால்தான் யாழ் பல்கலையில் மாணவர் செய்த எதிர்ப்புப் போராட்டம் என்னை அதிச்சியடைய வைத்தது. 

உனது அடிமனது உணர்ச்சிவரை கண்காணித்து, வேவுபாத்து, கோரமாக அடக்கும் அரசை எதிர்ப்பதை நிச வாழ்க்கையில் காண்கையில், நான் அப்படிச் செய்து இருப்பேனா என்றால்.  அனேகமாக இல்லை.  வந்தோமா, படித்தோமா என்ற மனநிலையில் வளக்கப்படும் ஈழத்தவர்களில் ஒருவராகவே இருந்திருப்பேன்.  இந்த மாணவர்களின் பெற்றோர்களும் இதைத்தான் அவர்களுக்கு இன்று செல்வார்கள் என்று நினைக்கிறேன்.  இந்த பொளதீக, அரசியல், பண்பாட்டு சூழலில் சிந்திக்கையில்தான் இவர்களின் எதிர்ப்பும், உணர்வும், துணிவும் பல மடங்கு கனமாய் இருக்கிறது.

ஈழத்தவர்களின் அரசியல் உரிமைகளை ஈழத்தில் வசிப்பவர்களே முடிவுசெய்ய வேண்டும் என்பது மிகச் சரியே.  ஆனால் அந்த எதிர்ப்புப் போராட்ட மாணவர் கூறியது போல அவர்களின் உரிமைகளைக் கேக்க அவர்களுக்கு யாருமே இல்லை, எந்தச் சுதந்திரமும் இல்லை.  அவர்கள் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.

Labels: ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home