<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, September 03, 2005

அறிவியல் அறிவு மார்க்கம்

அறிவியல் அறிவு மார்க்கம் (இ.வ: விஞ்ஞான அறிவு மார்க்கம்) இவ்வுலகின் இயல்பை, இயக்க முறையை ஒரு சீரான அணுகுமுறையினூடாக கண்டறிந்து, நிரூபித்து, பகிர முனைகின்றது. அறிவியல் நோக்கிலான அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் விழிர்புணர்ச்சி காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்க்கு அடித்தளம் இட்டது. அதற்கு முன்னைய சீன, இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அல்லது தெரிந்து அறிவியல் அறிவு மார்க்கம் என்ற தனித்துவமான அறிதல் வழிமுறையாக உருவாகியது.

அறிவியல் அறிவு மார்க்கத்தை மூன்று கூறுகளாக பின்வருமாறு பிரிக்கலாம்:
1. அறிவியல் வழிமுறை
2. அறிவியல் அறிவு
3. அறிவியல் அறிவின் பயன்பாடு

அறிவியல் அறிவு மார்க்கம் என்ற சொற் தொடர் அறிவியல் வழிமுறையையே பொதுவாக சுட்டி நிற்கின்றது. அறிவியல் வழிமுறையின் ஊடாக பெறப்படுவதே அறிவு. அவ் அறிவை சீரிய அமைப்பு அடைப்படையிலான பயன்பாட்டின் விளைவே தொழில்நுட்பம். ஆரம்பத்லேயே, அறிவியல் அறிவு மூலம் தொழில் நுட்பம் விருத்தி அடைந்து என்றாலும், 1900 களுக்கு பிற்பாடே அவ் அறிவை திட்டமிட்ட செழுமையான முறையில் பொறியிலுக்கு பயன்படுத்தப்பட்டது.

அறிவியல் மார்க்கத்தின் அடிப்படை தத்துவம்

அறிவியல் அறிவு மார்க்கத்துக்கு அடிப்படை உலகாயுத தத்துவம். இத் தத்துவத்தின் பல கூறுகளை சோ. ந. கந்தசாமி "இந்திய தத்துவக் களஞ்சியம்" என்ற நூலில் விரிவாக விள்க்கியுள்ளார். "பிரபஞ்சமாகிய இயற்கை பிறருடைய தயவின்றித் தானே என்றும் உள்ளது, தானே இயங்குகின்றது." இவ் இயற்க்கைக்கு மாறா இயல்புகள் உண்டு. எம்மால் அவ் இயல்புகளை அறிய முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையிலேயே அறிவியல் அறிவு மார்க்கம் செயல்படுகின்றது.

கணி, அள, "அளக்கப்பட கூடியதே அறிய பட கூடியது" என்கிற கூற்று சற்று மிகைப்பட்ட கூற்று என்றாலும், அளத்தல் அறிவியல் மார்க்கத்தின் முக்கிய அம்சம். மேலும், உலகில் உண்மை இருக்கின்றது. அதை நாம் சார்பற்ற நிலையில் நோக்கலாம் என்பதும் இவ் மார்க்கத்தின் ஒரு முக்கிய அம்சம்.

அறிவியல் வழிமுறை

அவதானிப்பு
எமது புலன்களின் வழியே இவ் உலகின் நிகழ்வுகள், பொருட்களின் தன்மைகளை அவதானிக்கின்றோம்.

பரிந்துரை நடைமுறை கோட்பாடு
துல்லியமான அவ் அவதானிப்புகளை அடிப்படையாக வைத்து இவ் உலகின் இயல்பை, இயக்கத்தை நோக்கி நாம் ஒரு புரிதல் அடைந்து, அப் புரிதலின் அடிப்படையில் நாம் ஒரு நடைமுறை கோட்பாட்டை பரிந்துரைக்கின்றோம் அல்லது ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.

பரிசோதனை
பரிந்துரைக்கப்படும் எக் கோட்பாடும் எதோ ஒரு வழியில் பரிசோதனைக்கு உட்பட்டு நிருப்பிக்கப்பட வேண்டும், அப்படி நிருப்பிக்கப்பட இயலாத கோட்பாடுகள் அறிவியல் அறிவுமூல கோட்பாடுகள் என கருதப்பட முடியாது. எவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்துவது? பரிந்துரைக்கப்படும் கோட்பாடு எதாவது சவலான நிகழ்வை அல்லது இயல்பை ஊகிக்க அல்லது வருவதுரைக்க வேண்டும். பரிசோதனைமூலம் அந் நிகழ்வு நிருபிக்கப்படும், அல்லது மறுக்கப்படும். இன்னுமொரு வழியில் சொல்லுவதானால், பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாடின் "உண்மையான பரிசோதனை அந்த கோட்பாட்டை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது தவறு என்று காட்டும் முயற்சியே." எனவே தகுந்த பரிசோதனை வடிவமைத்தல் அறிவியல் அறிவு மார்க்கத்தின் மூல அம்சம்.

எந்த ஒரு நடைமுறை கோட்பாடும் அதன் வரையறைகளை தெளிவாக குறிப்புடுதல் வேண்டும். குறிப்பாக பரிசோதனை உபகரண குறிப்புக்கள், பரிசோதனை குறைபாடுகள், சூழ்நிலைகளை பற்றி தெளிவான விளக்கங்கள் தரப்படுதல் வேண்டும். எந்த ஒரு பரிசோதனையும் அதன் விளைவுகளும் மீண்டும் பிறர் செய்யகூடியதாக இருந்தாலே அது ஏற்றுக்கொள்ளப்படும்.

முடிவுகள்
பரிசோதனை முடிவுகள் சவாலான நிகழ்வுகளை அல்லது இயல்பை சரியாக வருவதுரைத்தால் அக் கோட்பாடுகள் ஏற்கனவே உள்ள பரந்த நடைமுறை கோட்பாடுகளுடன் இணைக்கப்படும். மாறாக, பரிசோதனை முடிவுகள் வருவதுரைக்க தவறினால், பரிந்துரைக்கப்பட்ட கோட்பாடுகள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை கோட்பாடோ அல்லது பரிசோதனையோ மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

பகிர்வு
முக்கியமான பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாடுகள், பரிசோதனை முடிவுகளை பிறருடன் பகிர்வது, அறிவியல் அறிவு மார்க்கத்தின் முக்கிய ஒரு படி நிலை. பகிர்வதன் மூலமெ பிறர் ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்தப்பட்டு, பரந்த நிருபீக்கப்பட்ட நடைமுறை கோட்பாடுகள் விரிவடைந்து அல்லது செதுக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் தொடர்ந்து செல்ல உதவுகின்றது.

இறுதியாக, ஒரு நடைமுறை கோட்பாட்டின் திறன் அதன் வருவதுரைக்கும் ஆழத்தில் உள்ளது. இன்றைய அறிவியல் நடைமுறை கோட்பாடுகள் உலகின் பல இயல்புகளை விளக்கி நிற்கின்றது. அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே எமது தொழில்நுட்ப சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் பல துறைகளில் நாம் ஆரம்பத்திலேயே இருக்கின்றோம். அறிவியல் அறிவு மார்க்கம் (அவதானிப்பு, நடைமுறை கோட்பாடு பரிந்துரைப்பு, பரிசோதனை, முடிவுகளை அலசுதல், பகிர்வு) பரினாம வளர்ச்சி பாதையில் மனிதனை இட்டு செல்வதாகவே நாம் நம்புகின்றோம். இவ் அறிவியல் அறிவு மார்க்கத்திற்கு எல்லைகள் உண்டா? இருந்தால் அவை எவை என்பதுவே மேற்கொண்டு நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home