<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, August 03, 2013

உத்தமத்தின் 2013 வலைத்தளம் தமிழில் ஏன் இல்லை?

கணினியில் தமிழை, இணையத்தில் தமிழை ஏதுவாக்க, வளர்க்க, ஊக்குவிக்கவென நிறுவப்பட்ட அமைப்பே உத்தமம்.  தமிழிலும் நுட்பத்திலும் சிறந்த வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாக அது தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.  தமிழ்நாடு அரசு, ஒருங்கிறி அமைப்பு போன்ற அனைத்துலக அமைப்புகளுக்களோடும், பல பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகளோடும் ஊடாடும் அமைப்பாக உத்தமம் விளங்குகிறது. அவர்கள் செய்யும் முதன்மைப் பணி, பல ஆண்டுகளில் ஒரே தலையாப் பணி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்வது ஆகும்.  2013 தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் ஆகத்து 15-18 ஆம் திகதிகள் நடைபெறவுள்ளது.  2013 ஆம் ஆண்டு மாநாட்டு வலைத்தளம் (http://ti2013.infitt.org/my/) பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.  ஆனால் அவை எவையும் தமிழில் இல்லை, தமிழிலும் இல்லை.  இது ஏன்?

வேர்ட்டில் தமிழில் தட்டச்சு செய்து படமாக்கி வலையில் ஏற்றியது ஒரு காலம்.  இன்று டுரூப்பல் (Drupal), வேர்ட்பிரசு(Wordpress) போன்ற உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியங்களைப் (Content Management Systems) பயன்படுத்தி சில மணி நேரத்தில் அழகான பன்மொழி வலைத்தளத்தை உருவாக்கிவிட முடியும். சிறந்த நுட்பர்களைக் கொண்ட உத்தமத்துக்கு, குறிப்பாக தமிழ்க் கணினியின் முன்னோடி அமைப்பான உத்தமத்துக்கு தமிழில் வலைத்தளம் அமைப்பது ஒரு நுட்பச் சிக்கலாக இருக்க முடியாது.  ஆனால் அவர்களின் வலைத்தளம் தமிழில் இல்லை.  இது ஏன்?

உத்தமம் தமிழில் தகவல்களைப் பகிர வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தரவில்லை.  அதனால் யாரும் சிறப்பாகப் பயனடையவார்கள் என்று அவர்கள் கருதவில்லை.  உத்தமத்தில் பங்கு கொள்ளும் அனேகருக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கும் தானே என்பது அவர்கள் கணிப்பு.  அப்படி இல்லாவிடினும் அவர்கள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.  இது அமைப்பின் கொள்கை தொடர்பானது. வேறு பல டமில் அமைப்புக்கள் இந்த மனப்பான்மையக் கொண்டு இருக்கின்றன, ஆனால் அவை பற்றி அவ்வளவு அக்கறை கொள்ளத் தேவை இல்லை.  ஆனால் கணினியில் தமிழை, இணையத்தில் தமிழை வளர்க்கவென நிறுவப்பட்ட அமைப்பு.  இவர்களே இந்த நிலை என்றால் வேறு அமைப்புகளுக்கு இவர்கள் போய் தமிழில் செய்யலாம் செய்யவேண்டும் என்று கூறுவதில் என்ன பயன் இருக்கிறது.

தமிழில் தகவல்களைப் பகிர்வதை அவர்கள் மதிப்புக் குறைவாக, அல்லது இழிவாகக் கருதி இருக்கலாம்.  ஏன் என்றால் கல்விசார் கொன்பிரன்சு என்றால் ஆங்கிலத்தில் நடத்தினால்தானே மதிப்பு.  தமிழில் செய்வது வழமை இல்லைத் தானே.

இறுதியாக, உத்தமம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இயங்குவதால் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க, தமிழில் வலையேற்ற கூடிய ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கலாம்.  இந்தக் கூடிய ஆற்றலை இவர்கள் செலுத்தத் தயாரில்லை. இதுதான் நான் பங்களிக்கும் சில அமைப்புக்கள் உட்பட்டவற்றின் நிலை.  தமிழில் உற்பத்தியைத் தரகிறார்கள், ஆனால் தமிழிலும் இயங்க முற்படுவதில்லை.  இது என்னத்தை உணர்த்துகிறது.  தமிழ் அன்றாடா இயக்கத்து ஏற்ற மொழி இல்லை.  அது சமசுகிருதம் போன்று சில தளங்களில் பூசைக்குப் பயன்படும் மொழி என்று அல்லவா. ஆக, உத்தமம் தமது இலக்குகளுக்கு எதிராகத் தாமே இயங்குகிறார்கள்.

உத்தமம் ஒருங்குறியில் விட்ட தவறைப் போன்ற ஒரு பெரும் தவறாகவே இதை நான் கருதுகிறேன்.  இதை எதோ யாரும் கவனிக்காமல் விட்ட தவறாக எடுத்துக் கொள முடியாது.  அமைப்பின் கொள்கையில், நடைமுறையில் ஊறிய ஒரு சூழமைவின் வெளிப்பாடு.

தமிழின் ஆக்க முனைகளிலேயே இந்த நிலை எனில், தமிழ்நாடு அரசு போன்ற அமைப்புக்களிடம் அதன் தகவல்களை தமிழிலும் தர வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியுமோ. 

Labels: ,

1கருத்துக்கள்

At 9:07 PM, Anonymous Anonymous said...

நியாயமான கேள்வியே. தமிழ் வளர்க்க முற்படுவோரே தமிழை புறக்கணித்தால் பின்னர் எப்படி தமிழ் வளரும், உத்தமத்திடம் இதே கேள்வியை யாமும் முன் வைக்கின்றோம்.

 

Post a Comment

<< Home