<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, February 28, 2015

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லையைத் தீர்மானிக்கும் சாதியக் குண்டர்கள்

மீண்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் தான் எழுதிய நூலுக்காக வன்முறையாகத் தாக்கப்பட்டு இருக்கிறார்.  சீனா போல், பல இசுலாமிய நாடுகள் போல் இது வழமையாக நடைபெறும் செய்தியாக தமிழ்நாட்டில் நிறைவேறி வருகிறது.  நூலைத் தடை செய்.  எழுத்தாளரை மண்டியிட வை.  கைது செய்.  தண்டி என்று சாதிக் கட்சிகளும், சமய வாதக் கட்சிகளும், தமிழ்ச் தேசியக் கட்சிகளும் ஒற்ற குரலில் கோரிவரும் சூழல் தமிழ்நாட்டின், தமிழ்ச் சமூகத்தின் ஒரு இருண்ட காலத்துக்கான தொடக்கமாகவே பார்க்க வேண்டும்.

இப்படி தடை, கைது, தண்டி என்று அண்மையில் குதித்து இருப்பது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.  எழுத்தாளர் புலியூர் முருகேசன் தனது பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்ற சிறுகதை நூலுக்காக வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். 

விடுதலைப் புலிகள் ஆனாலும் சரி, இடதிசாரிப் புரட்சிவாதிகள் ஆனாலும் சரி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று வந்துவிட்டால், அவர்களுக்கு மட்டுமான கருத்து என்று மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.  மற்றவர்கள் கருத்துக்களை மறுக்கிறார்கள், வன்முறையால் அடக்க முனைகிறார்கள்.  இது தமிழ்ச் சமூகத்தின் மிகக் கொடுமையான பண்புகளில் ஒன்று.

தான் எந்த ஆதாரமும் இல்லாத கடவுளை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன் என்று எழுதியதற்காக வங்காளதேச எழுத்தாளர் Avijit Roy அண்மையில் கொல்லப்பட்டார்.  இதே மாதிரியான ஒரு சூழலே தமிழ்ச் சூழலில் உருவாகி வருகிறது. 

விரைவில், பெண்களை முழுக்க மூடி முக்காடு அணிந்து செல்லுங்கள்.  தனியே போகாதீர்கள்.  விளையாடாதீர்கள்.  இசை கேக்காதீர்கள்.  பள்ளி செல்லாதீர்கள்.  வேலைக்குப் போகாதீர்கள்.  என்று தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் கோரினால் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை.  தூ என்று காறித்துப்பும் வண்ணம் உள்ளது தமிழ்ச் சமூகத்தி முன்னேற்றப் பாச்சல். 

Labels: ,

2கருத்துக்கள்

At 9:47 PM, Blogger அன்புடன் நீலன் said...

சாதியக் குண்டர்கள் மட்டுமில்லை, இது சாதி - மதக் குண்டர்களின் கூட்டணி, ஒரு புத்தகத்தை வாசிக்காமல், அதை மதிப்பீடு செய்யாமலே அதனை கொளுத்தி அதன் வெப்பத்தில் அரசியல் சூட்டை பெறத் துடிக்கும் அபாயகரக் கூட்டணி. இன்று இஸ்லாமிய நாடுகளில், வங்கதேசம், வட இந்தியாவில் நிகழ்த்தப்படும் கருத்துரிமைக்கான எதிரான படுகொலைகள், நாளை தமிழகத்திலும் வரும் பேரபாயம் நிறையவே உள்ளன... இவர்களை முளையிலேயே கிள்ளி எறிவதே நல்லது..

 
At 9:07 AM, Blogger நற்கீரன் said...

ஆமாம். உங்களின் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். மேலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஒரு சமூகத்தின் அரசியல் சமூகப் பண்பாட்டில் அடிவேரில் ஊன்ற வேண்டிய ஒரு விழுமியம். அந்த விழுமியத்தை தமிழ்ச் சமூகத்தில் நாம் நிலைநாட்ட வேண்டும்.

 

Post a Comment

<< Home