<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, May 20, 2013

தமிழ்நாட்டில் சீன வழிக் கல்வி

சீன மொழியே உலகில் அதிக மக்கள் பேசும் மொழி.  இன்று சீனா உலக வல்லரசாசிவிட்டது  சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட பல மடங்கு பெருகி வளர்ந்துள்ளது.  இதனால் சீன மொழி அறிந்த, மலிவான தொழிலாளர்களுக்கான பொருளாதார வாய்ப்பு மிகவும் வேகமாக வளச்சி அடைந்து வருகின்றது.

இந்த மிகப் பெரிய பொருளாதார வாய்ப்பை தமிழ்நாடு அரசு முறையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.  இந்தத் திட்டத்துக்கு அமைய தமிழ்நாட்டில் அடிப்படைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கல்வி சீன வழியில் அமையும் என அதிமுக தலைவி செயலலிதா அறிவித்துள்ளார்.  இதன் முன் முயற்சியாக 320 பள்ளிகள் ஏற்கனவே சீன மொழியில் கல்வி முன்னெடுக்கப்படுகிறது. 

சீன மொழி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கடினமாக இருக்கின்றது என்றும், தாய் வழிக் கல்வியே சிறந்தது என்றும் அறிவியலாளர்களும் கல்வியாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.  சீனம் இரண்டாம் மொழியாக திறனையாகக் கற்பிக்கப்படலாம் என்றும், தேவைப்படுபவர்களுக்கு கூடிய மொழிக் கல்வி ஆதரவு வழங்கலாம் என்றும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.  ஆனால் தமிழ்நாடு அரசு சீன வழிக் கல்வி இன்றைய பொருதாரத் தேவை என்றும், தமிழ்நாடு வேகமாகப் பொருதார வளர்ச்சி பெற இது அவசியம் என்று வாதிடுகிறது.  சீனா இந்தியாவை ஆக்கிரமித்தால், சீன வழிக் கல்வி இன்னும் கூடுதலாகப் பயன்படும் என்றும் கூறியுள்ளது.

Labels: ,

தமிழ்நாட்டில் எங்கும் தமிழில்லை, எதிலும் தமிழில்லை

அரச கல்வி ஆங்கில மயமாக்கவுடன் திராவிட கருத்தியலின் இறுதி மூச்சும் அடங்கிவிடும்.  எதைக் கூறி, எதை வைத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அதையே புதைத்துவிட்டு புதிய கடவுள்களுக்கு அடிப்பணிந்து விட்டார்கள்.  தமிழ்ப் பற்று, தமிழ் வளர்ச்சி என்று யாரும் இனி பேச, சொத்தமொழி மாநாடுகள் நடத்த இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. 

சமசீர் கல்வி பரிந்துரைக்கப்பட்ட போது தாய்மொழிக் கல்வி பரிந்துரையை திமுக கருத்தில் கொள்ளவில்லை.  தமிழ் ஒரு பாடம் ஆகக் கூட தமிழ்நாட்டில் கொண்டுவர முடியவில்லை.  தமிழ்நாட்டு வலைத்தளங்களில் கூட தமிழை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்கவில்லை. 

அதிமுக ஆங்கிலத்தை அரச பள்ளிகளில் கல்வி மொழியாக ஆக்கி தமிழின் அடி ஊற்றுக்கே வேட்டு வைத்துள்ளது.  மேல் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று போலிக் கோசம் போடுகிறார்கள்.  சட்டம் மக்கள் புரியும் மொழியில் இருக்க வேண்டுமாம். உண்மைதான்.  அப்படியானால் அடிப்படைக் கல்வி மக்கள் மொழியில் இருக்கத் தேவை இல்லையா. 

1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் தற்கால மருத்துவம் தமிழில் சொல்லித் தரப்பட்டது.  கலைச்சொற்கள், கலைக்களஞ்சியங்கள், பாடத்திட்டங்கள் என்று ஒன்றரை நூற்றாண்டாக ஆய்த்தங்கள் செய்துமுடிந்த பின்பும் மருத்துவக் கல்வி தமிழில் இல்லை.  ஏன் அரச குடியாட்சிப் பணிகளில் கூட தமிழ் முறையாக அமுலில் இல்லை.  என்ன கேட்டுக்கு ஆட்சி மொழிச் சட்டம். 

தமிழை ஆட்சிமொழியாக, கல்வி மொழியாக, சட்ட மொழியாக ஆக்க திராவிட கட்சிகளால் முடியவில்லையா. அப்படியானால் இவர்கள் திறமை அற்றவர்கள், வல்லமை இல்லாதவர்கள்.  விரும்பவில்லையா, அப்படியானால் இவர்கள் போலிகள்.  இரண்டுமே இல்லையா, அப்புறம் எதற்கு இவர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கத்த வேண்டும். 

கல்வி இல்லாத மொழி மொழியல்ல.  அது வெறும் எலும்புக் கூடும்.  ஒருவனால் தமிழில் அறிவியல் பேச முடியாது எனில், சமூகவியல் பேச முடியாது எனில், தொழில்நுட்பம் பேச முடியாது எனில் வேறு என்ன பேசி என்ன பயன். 

ஈழத்தில் தமிழ் திட்டமிட்டு கொல்லப்படுகிறது.  தமிழ்நாட்டில் தமிழை தற்கொலை செய்கிறார்கள்.  ஆங்கிலக் கல்வி நிறைவேறினால் தமிழியமும் திராவிடமும் இணைய முடியாத திசைகளில் பயணிக்கும். 

Labels:

Saturday, May 18, 2013

தமிழ்நாட்டில் அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழிக் கல்விக்கு மரண அடி

அதிமுக அரசு தமிழிநாட்டு அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி விரிவாக்கவுள்ளது.  தாய் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை கல்வியாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் எவ்வளவு எடுத்துரைத்தும் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.  அரச முறையாக தரமான கல்வி வழங்கத் தவறியதை எதோ ஒரு வகையில் மறைக்கவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. 

ஆங்கிலக் கல்வியே எங்கும் இருக்கிறது என்பது ஒரு மாயை.  யேர்மனி, யப்பான், பிரான்சு, சீனா, உருசியா, இலங்கை போன்ற தாய்மொழிக் கல்வி நாடுகளே பெரும்பான்மை.  இந்த நாடுகள் தாய் மொழிக் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு தடை இல்லை என்பதை நிரூபித்து உள்ளன.  இந்தியாவில் கூட தாய் மொழிக் கல்வி வலுவாக உள்ள கேரளா ஒரு சிறந்த முன் எடுத்துக் காட்டு. அங்கு அவர்கள் தாய் மொழிக் கல்வியை விரிவாக்கவே நடவடிக்கை எடுக்கிறார்கள். 

தமிழ் வழிக் கல்வி ஆங்கில மொழி அறிவுக்கு தடை என்பதும் ஒரு நியாமான வாதம் இல்லை.  ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாக கற்றுக் கொள்ளலாம்.  அதன் பரந்த ஊடகங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.  ஆங்கில மொழியை மட்டும் அல்ல சீனம், அரபு, எசுபானியம் என்று மேலும் பல மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை பொது மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.  அரச கல்லூரிகள் கல்வித் தரத்தை அடிமட்டமாக்கி விட்டு, தனியார்மயமாக்கம் ஊடாக கல்வியை வியாபாரம் ஆக்கி விட்ட சூழலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கில வழிக் கல்வியால் தமிழ்நாடு அரச பள்ளிகளில் தாமாக தரம் உயர்ந்து விடப் போததில்லை.  தமிழ்நாட்டில் பெரும்பான்மையானோர் கோல் சென்ரரில் வேலை பார்க்க தகுதி பெற வேண்டும் என்று அரசு நினைத்தால், அது ஒரு வேளை நிறைவேறலாம்.  இவ்வளவு காலம் பன்னாட்டு கம்பனிகளுக்கு வேலை செய்தும் இந்தியா தனாக ஒரு புத்தாக்கச் சூழலையோ, சொந்த அறிவு மூலங்களையோ கொண்டிருக்கவில்லையே என்று காரணம் தேடினால், தமிழ்நாட்டின் அரச மனப்பான்மையில் பதில் கிடைக்கும்.

இலங்கையில், மலேசியாவில் மிகவும் சிக்கலான பாதகமான சூழல்களில் தமிழ் வழிக் கல்வி முன்னெடுக்கப்படும் போது தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்படுவது மிகக் கவலை தருவது. 

இது தமிழ் மொழி, பண்பாடு சமூகத்தைப் பொறுத்த வரையில் பாரிய விளைவுகளைத் தரப் போகிறது.  முதலாவதாக , தமிழ் வழிக் கல்வியின் மரண அடி இதுவாகத்தான் இருக்கும்.  இரண்டாவதாக தமிழில் அறிவு வளர விடாமல் தடுத்து. ஒரு அறிவற்ற சடங்கு மொழியாக ஆக்கும்.  மேற்குநாடுகளில் தமது மொழிகளை இழந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்.  முதற்குடிகளை, கறுப்பினத்தவர்களை, அவர்கள் எவ்வளவு தூரம் தமது அடையாளத்தை, அறிவைத் துலைத்து உள்ளார்கள். இன்று வரை அவர்களால் முழுமையாக மீள முடியவில்லை.

இந்த நகர்வுடன் திராவிட இயக்கம் தமிழ் சமூகத்தை முற்றிலும் விலைக்கு வித்தவிட்டது என்பது தெளிவு.  பகுத்தறிவைத் முதலில் தொலைத்தார்கள்.  சமூக நீதியை பின்னர் மறந்தார்கள்.  இப்பொழுது தமிழையும் புதைத்து விட்டார்கள்.  இதில் திமுக, அதிமுக எல்லோருமே சம பங்கு. 

Labels: