<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, January 15, 2015

எதுவும் புனிதமானது இல்லை ("nothing-is-sacred")

சமயம், இனம், சாதி, வர்க்கம், தேசியம், மொழி, நாடு, பால், பாலமைவு, உணர்வுகள், நம்பிக்கைகள், சடங்குகள், சட்டங்கள், மண்ணாங்கட்டி, கத்தரிக்காய் என்றும் எதுவுக்கும் கட்டுப்பட்டத்தல்ல கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.  வன்முறையற்று, திணிப்பு அற்று கருத்த்தைக் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் கட்டற்றது.  இச் சுதந்திரத்தின் ஆணிவேரில்தான் அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் கட்டமைக்கப்படுகின்றன.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சிந்தனை உருவாக்கத்துக்கு, பரிமாற்றத்துக்கு, விமர்சனத்துக்கு, திருத்தலுக்கு அவசியமானது. 

மேற்குநாடுகளில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது கடுமையான போராட்டங்களுக்குப் பின்பு நிலைநிறுத்தப்பட்ட சுதந்திரம், உரிமை.  பிரான்சில், ஐரோப்பிய மறுமலர்ச்சி, பிரெஞ்சுப் புரட்சி, 60 களின் எதிர்ப்புப் புரட்சியில் வளர்த்தெடுக்கப்பட்டதுதான் வளையாத பிரெஞ்சு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.  உங்கள் கருத்தை மறுதலிக்கிறேன், ஆனால் அதைக் கூறுவதற்கான உங்கள் உரிமையை உயிர் குடுத்தேனும் பாதுகாப்பேன் என்று உரைத்த வோல்ட்டயர் (Voltaire) பிறந்த மண்.  அங்கதம், சித்திரம், வரைகலை அவர்களின் பண்பாட்டில் வேரோடியது.  அங்கே சார்லி ஃஎப்டோ (charlie hebdo) என்ற அங்கத சித்திர பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரத்தை சகிக்க முடியாமல் இசுலாமவாதிகள் அந்தப் பத்திரிகையின் 12 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்கள். 

பிரான்சியர்கள் போலன்றி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வோ அக்கறையோ அற்ற சமூகம் தமிழ்ச் சமூகம்.  இந்தத் தமிழ்ச் சமூகம் உருவாக்கிய ஒரு தலை சிறந்த அறிவாளர், எழுத்தாளர் பெருமாள் முருகன்.  அவரின் ஒரு கூரிய படைப்பு மாதொருபாகன் என்ற புதினம்.  இந்தப் புதினத்தை தடைசெய்யக் கோரி இந்துதத்துவாதிகளும் சாதியவாதிகளும் துன்புறுத்தியதால் தான் எழுதுவதையே நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளார் பெருமாள் முருகன். 

சார்லி ஃஎப்டோ தாக்கப்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்தி ஐரோப்பிய இனவாதிகள் இசுலாமியர்களுக்கு எதிரான ஒரு வன்முறையை காட்ட விழைகின்றார்கள்.  இசுலாமவாதிகளும் இனவாதிகளும் இது ஓர் மேற்கு கிழக்குப் போர் என்று சித்தரிக்கப் பாக்கிறார்கள்.  ஆனால் இது காட்டுமிராண்டிகளுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்குமான போர்.  மன நோயாளிகளுக்கும், பரினாமித்த, வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற மனிதர்களுக்குமான போர். 

சார்லி ஃஎப்டோ குரல் கொடுக்க பிரான்சு வரலாறு காணாத கூட்டத்தைக் கண்டது.  ஆனால் பெருமாள் முருகன் போன்ற பல எழுத்தாளர்களினதும் பேச்சாளர்களினதும் சாதாரனப் பொது மக்களதும் பேச்சுத் சுதந்திரத்தைப் பாதுகாக்க பத்துப் பேர் கூடக் கூடவில்லை. 

நீத்துப் போன, முதுகெலுப்பு அற்ற திராவிடக் கட்சிகள் மூச்சைக் கூட விடவில்லை.  கபடதாரி (hypocrite) தமிழ்த் தேசியவாதிகள் பேசவில்லை.  இடதுசாரிகள் கூட சமயம் என்று வந்தவுடம் தூர ஓடிப் போய் விடுகிறார்கள். 

எவ்வளவுதான் ஆங்கிலம் ஆக்கிரமிப்புச் செலுத்தினாலும், இலக்கியத்தில் அதிக நோபல் பரிசுகள் பிரெஞ்சு மொழி எழுத்தாளர்களுக்குத்தான் போய் உள்ளன.  கருத்துக்களை சீண்டி, நோண்டிய அவர்களின் மரபினால்தான் இருக்கும்.  அத்தகைய மரபை உருவாக்காமல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பேணாமல் தமிழ்ச் சூழல் உண்மையான எந்த வளர்ச்சியையும் பெற முடியாது.

Labels: , ,

Saturday, August 03, 2013

"மட்ராஸ் கபே" படத்தை தடை செய்யக் கோராதீர்கள்

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று அடிக்குரலில் கத்திவிட்டு, மறுகணமே ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கோருவது கோலிக்குரியது.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக இவ்வாறு முரண்பாடு கொண்ட நிலைப்பாடுகளை எடுப்பது தமிழ்ச் சூழலில் எல்லாத் தரப்புக்களும் செய்யும் ஒரு அடவாடித்தனம்.  இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், தமிழிய அமைப்புகள், சமயக் கட்சிகள், சாதிக் கட்சிகள், ஈழத்து இயக்கங்கள் என்று எல்லோரும் கருத்துக்களை தடை, தணிக்கை, தண்டிக்க செய்வதன் பின் ஒளித்துக் கொள்கிறார்கள்.  துண்டறிக்கை, சுவரொட்டி, கட்டுரை, இதழ், நாளிதழ், நூல், திரைப்படம், இசைத்தட்டு, நாடகம், நிகழ்த்தல் என எல்லா வெளிகளிலும் கருத்தை தடை செய்ய முனைகிறார்கள்.  கருத்தை கருத்தால் எதிர்க்க திரணியற்றவர்கள், எதிர்க்க ஆற்றல் இல்லாதவர்கள் அல்லது விருப்பாதவர்கள் எடுக்கும் குறுக்குவழிகளே இவை. 

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமே பிற அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளமான ஒர் அடிப்படை மனித உரிமை.  மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்கு, சமூக மாற்றத்துக்கு, தன்மதிப்புக்கு, படைப்பாக்கத்துக்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம்.  சிறுவர் ஆபாசம், ஆபத்தான விளம்பரம், நேரடியாக பாதிப்பை தரக் கூடிய வெறுப்புப் பேச்சு, பாதுகாப்பு போன்று மிகக் குறுகிய எல்லைகளைத் தவிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படல் ஆகாது.  தமிழ்நாடும், இந்தியாவும் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாக சீரிய அக்கறை அற்றவை.  அதனால் யார் ஒரு படைப்புக்கு எதிராக ஒரு சிறு கலக்கம் செய்தாலும் மிக உச்சகட்டமான முடிவாக அந்தப் படைப்பை தடை செய்து விடுவார்கள்.  இலங்கையைப் பற்றிக் கேக்கத் தேவை இல்லை.

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற தமிழ் நூல் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது, பல திரைப்படங்கள் தடை, தணிக்கைக்கைக்கு உட்பட்டது, பேசியதற்காக பலரை சிறைக்கு அனுப்பயது, இதுதான் இன்றைய தமிழ்நாடு, இந்தியா.  இதில் இருந்து மீள்வது என்றால் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதியாக எல்லோருக்கும் வழங்க வேண்டும்.  குறிப்பாக எமக்கு பிடிக்காத, நாம் ஏற்றுக் கொள்ளாத கருத்துக்களைத் தாங்கி படைப்புகள் வெளிவரும் போது. அவற்றுக்கு எதிராக நாம் மறுப்பு நூல் எழுதலாம், விமர்சிக்கலாம், புறக்கணிக்கலாம், ஆனால் அவற்றை தடை செய்யக் கூடாது, தணிக்கை செய்யக் கூடாது, தண்டிக்கக் கூடாது. 

ஆகவேதான் நான் பார்க்காத, பார்க்கப் போகாத "மட்ராஸ் கபே" படத்தைத் தடைசெய்ய சிலர் கோருவதை கண்டிக்கிறேன்.  உங்களுக்குப் படம் பிடிக்கவில்லையா பார்க்காதீர்கள்.  படத்தில் தவறாக தீங்காக கருத்துக் கூறப்பட்டுள்ளதா.  புறகணியுங்கள்.  பிறரை புறக்கணிக்கக் கோருங்கள், தூண்டுங்கள்.  ஆனால் தடை செய்ய, தணிக்கை செய்யக் கோராதீர்கள்.  அவ்வாறு கோருவது, எமக்கு எல்லோருக்கும் தேவையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கும்.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக நான் முன்னர் செய்ய ஒரு நிகழ்த்தல் (presentation)
https://docs.google.com/file/d/17Q0yyHwHPQhVZ0qkr-CAENmRofGymUg1MnkhI3xhrMJU4YwqiCLluGuHKpYk/edit?usp=sharing

 

Labels: , ,