<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, December 31, 2013

நேரடி மக்களாட்சியும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும்

ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வந்தும், தாம் மக்களிடம் கருத்துக் கோர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிய போது மக்களின் தெரிவைப் புறக்கணிக்கிறார்கள், தேவையற்ற நாடகம் போன்று பல்வேறு வழிகளில் விமர்சிக்கப்பட்டது.  அவர்கள் மக்கள் கருத்தை அறிய முயன்ற முறையில் போதாமைகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் செயற்பாடு தவறானதா?  அக் கட்சியின் ஒரு முக்கிய கொள்கையான அதிகாரப் பரவலாக்கல் (Decentralization), நேரடி மக்களாட்சி (Direct Democracy) வரவேற்கப்பட வேண்டிய ஒன்றா?

சார்பாண்மை மக்களாட்சியின் (Representative Democracy) படிவளர்ச்சியாகக் கருதப்படுவையே நேரடி மக்களாட்சி (Direct Democracy), பங்களிப்பு மக்களாட்சி (Participatory Democracy) ஆகியவை.  நேரடி மக்களாட்சி என்பது மக்களின் சார்ப்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அல்லாமல் மக்களே நேராக முக்கிய முடிவுகளை எடுத்தலில் பங்கெடுப்பது ஆகும்.  பங்களிப்பு மக்களாட்சி என்பது அரசின் செயற்பாடுகளில் மக்கள் பங்களிக்க கூடிய வாய்ப்புக்களை வழங்கக்கூடிய கட்டமைக்களைக் கொண்டிருப்பது ஆகும்.  பல்வேறு விடயங்களில் பொது வாக்கெடுப்பு (Referendum) நேரடி/பங்களிப்பு மக்களாட்சியின் ஒரு முதன்மைக் கருவி (mechanism) ஆகும்.  அரசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான உரிமையும் (right to recall) வாய்ப்பும் இதன் ஒரு நீட்சி ஆகும். 

ஆம் ஆத்மி கட்சி அதிகாரப் பரவலாக்கலை, நேரடி மக்களாட்சியை பலமான உள்ளூர் அலகுகள் கொண்டு நிறைவேற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  தேர்வு செய்யப்பட்ட ஒருவரை திருப்பி அழைப்பதற்கான சட்டத்தையும் இயற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  மேலும் கட்சி சார்பற்ற ஊழல் குறைகேள் அதிகாரிகளை (ombudsmen) நியமிக்கவும் உறுதி தந்துள்ளது.  இந்த வகையில் இந்தியாவில் நேரடி/பங்களிப்பு மக்களாட்சியை முன்னெடுக்கும் ஒரு முன்னோடிக் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது.

நேரடி மக்களாட்சி அல்லது பங்களிப்பு மக்களாட்சி என்பது பெரும்பான்மையினரின் சர்வதிகாரமாக மாறும் என்றும், நடைமுறையில் நிறைவேற்ற முடியாதது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  இதில் முதலாவது குற்றச்சாட்டு முக்கியமானது, மிகப் பாதகமானது.  நேரடி மக்களாட்சி மட்டும் இல்லை, பொதுவாக எந்தவொரு மக்களாட்சியிலுமே பெரும்பான்மையினரின் சர்வதிகாரம் உருவாதற்கு நிறைய வாய்புக்கள் உண்டு.  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கை ஆகும்.  இதைத் தடுக்கும் வண்ணம் அதிகாரப் பிரிவினையும், அதிகாரப் பரவலாக்கமும் முக்கியம் ஆகும்.  கனடாவில் கியூபெக் போல் உள்ளூர் மக்கள் கட்டுப்படுத்தும் மக்களாட்சி இலங்கையில் தோன்றி இருந்தால் ஈழப்போர் வெடித்து இருக்காமல் இருந்திருக்கலாம்.  இலங்கைப் பிரச்சினை பெரும்பான்மை சர்வதிகாரம் என்பதிலும் பார்க்க அதிகாரக் குவியலினால் எழுந்தது.  இன்றும் கூட தமிழ் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ, அல்லது காசுமீர் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும் முதிர்ச்சி இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ இல்லை.  ஆனால் டில்லி தேர்தல் முடிவுகள் அந்த முதிர்ச்சி நோக்கி இந்தியா ஒரு படி பயணித்து உள்ளது என்றுதான் கூறவேண்டும். 

மக்களுக்காக நாம் முடிவெடுப்போம் என்று இடதிலும் வலதிலும் இருந்து கோருவோர் நேரடி மக்களாட்சியை நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று கோருகின்றனர்.  ஆனால்  இணையம், நகர்பேசி உட்பட்ட புதிய தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் பரந்த நேரடிப் பங்களிப்பை நகரப்புறங்களில் கூட சாத்தியப் படுத்தி உள்ளன.  உள்ளூர் உணவு (Local Food), உள்ளூர் பொருளாதாரம் (Local Economy), Hyperlocal, குமுகம் கட்டுதல் (community building) என்ற இன்றைய போக்குக்களுடன் நேரடி மக்களாட்சி ஒரு பொருத்தமான முன்னேற்றமே.

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் அதிகார மையத்தினரும், பெரும் வணிக நிறுவனங்களும் பெரிதும் பயப்படுகின்றன.  அதிகாரப் பரவலாக்கலால், நேரடி மக்களாட்சியால் பாதிக்கப்படப்போவர்கள் இவர்களே.  இந்திய வலதுசாரி வலைத்தளமான ஃபெசுபோசுடில் (Firstpost) நேரடி மக்களாட்சியையும் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்சித்து  Perils of direct democracy: AAP may be on the wrong track என்ற ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  மக்களுக்கு தமக்கு எது பொதுநலம் என்று தெரியும் என்பது உண்மை இல்லை ("It is simply not true that people know best or that they act in the greater common good.") என்று கூறி பழங்குடி மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து வேதி எடுத்தலை எதிர்த்தது, அன்னிய முதலீட்டை எதிர்த்தது போன்றவற்றை சுட்டிக் காட்சி மக்களுக்கு அவர்களுக்கு எது பொது நலம் என்று தெரியாது என்று வாதிட்டிருக்கின்றனர்.  இந்தக் குற்றச்சாட்டு நேரடி மக்களாட்சிக்கு மட்டும் இல்லை மக்களாட்சிக்கும் பொருந்தும்.  அவர்கள் சுட்டிய எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் பெரும் வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதே அவர்களின் கவலையாக இருக்கின்றது, குறிப்பாக வோல்மார்ட்.

உண்மையான சிக்கல் உள்ளூரில் இருக்கும் சாதிய, சமய, செல்வந்த அதிகாரக் கட்டமைப்புக்களிடம் சிக்காமல் நேரடி மக்களாட்சி அனைத்து மக்களின் பங்களைப்பை பெற்று அமைய வேண்டும் என்பதே.  சுருக்கமாக, ஆம் ஆத்மி கட்சி கொள்கையும் அரசமைப்பும் ஒரு நல்ல முன்னேற்றமாகவே அமைந்துள்ளது.  தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பெண்கள் உரிமைகள், சமத்துவம், சமூகவுடைமை, தமிழ் போன்ற கொள்கைகளுடன் திமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது போல.  காலம்தான் சொல்லும் திமுக போல் அரசியல் சாக்கடையில் விலைபோய் துலைந்து விடுவார்களா அல்லது துடிப்புடன் அவர்களின் கொள்கைகளை நிலைநாட்டச் செயற்படுவார்களா என்று. 

Labels: , , , ,

Monday, December 30, 2013

தான்தோன்றி அறிவர், எமது அறிவியலாளர் கோ. நம்மாழ்வார்

தமிழ்ச் சூழலில் அறிவியலாளர்கள் பலர் தாம் கற்ற அறிவை எம்மோடு, எமது சூழலின் தேவைகளுக்கு, சிக்கல்களுக்கு பகிர்ந்து கொள்வது அரிது.  எம்மோடு இணைந்து, எமது மூலங்களைப் பயன்படுத்தி, தொலைநோக்காகச் சிந்தித்து செயலாற்றிய சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒருவர் கோ. நம்மாழ்வார்.  வெறுமே பேசிக் கொண்டு மட்டும் இருக்காமல், எதிர்த்துக் கொண்டு மட்டும் இருக்காமல் முன்மாதிரிகளை, மாற்றுக்களை உருவாக்கினார்.  தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் தந்தை என்று இவரைக் கூறலாம்.  தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் ஒரு மூல அமைப்பாளாராக விளங்கினார்.  பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசு, கல்வித்துறை ஆதரித்த பசுமைப் புரட்சியின் குறைபாடுகளை துணிவாக, பல காலம் தனித்து நின்று எதிர்த்தார், அதற்கான மாற்றுக்களை உருவாக்கினார்.

அவர் அறிவியலை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்யவில்லை.  சுயமாக அறிவை ஆய, உருவாக்க, பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார்.  காப்புரிமத்துக்கு விதைகளைப் பறிகொடுக்காமல் இருக்க, நஞ்சுகலந்த வேதிகளுக்கு எமது உணவையும் சூழலையும் பறிகொடுக்காமல் இருக்க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகாமல் இருக்க அவர் எமக்கு கற்றுக் கொடுத்தார்.  அவரது அறிவை ஆர்வம் உள்ள அனைவருக்கும் கட்டற்று வழங்கினார்.  பெரும் ஆய்வு நிறுவனங்களிலோ, அல்லது பல்கலைக்கழங்களிலோ மறைந்து விடாமல், உழவர்களோடு களம் கண்டார்.  அண்டோனியோ கிராம்சி கூறும் உள்ளார்ந்த அறிவராக (organic intellectual) விளங்கினார்.  இவரின் உந்தலால் ச. கரிகாலன், இரா. ஜெயராமன் என்று பல இயற்கை உழவர்கள், சுற்றுச்சூழல் செயற்ப்பாட்டாளர்கள் உருவாகி உள்ளார்கள்..

கோ. நம்மாழ்வார் இயற்கை எய்தியது கண்டு மனம் கனக்கிறது.  அவர் வழி நின்று அவரது பணியை தொடர்வதே நாம் அவருக்கும் செலுத்தும் அஞ்சலியாக அமையும். 

Labels: , , , ,

Sunday, December 29, 2013

சங்கீதா ரிச்சார்ட்- கனடாவின் வீட்டுப் பணியாளர்கள் - தொழிலாளர்களுக்கான திறந்த சந்தை

ஒப்பந்தப் படியோ, அல்லது அமெரிக்க அடிப்படை ஊதியச் சட்டப் படியோ ஊதியம் வழங்கவில்லை, வீட்டுப்பணியாளரை துன்புறுத்தினார் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய இணைத் தூதுவர் தேவயானி கோபர்கடே ஐக்கிய அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக இந்திய அரசியல்வாதிகள் கொதிப்படைந்து உச்சகட்ட அழுத்தத்தை அமெரிக்கா மீது செலுத்தி வருகிறார்கள்.  பிற எந்த நிகழ்வுகளின் போதும் குடுக்காத அழுத்தத்தை இந்தியா இப்பொழுது செய்து வருகிறது.  என்ன உண்மை என்று தெளிவாக அறிய முன்னரே இந்தியா தனது மற்றைய குடிமகளை பலிகொடுத்து தூதரை காப்பாற்றும் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது, இந்தியாவின் இன்றைய ஏற்றதாழ்வு சூழ்நிலையை நன்கு சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.  இன்றைய இந்தியா தனது வெளிக் காட்சியைப் பற்றி, தனது எசமானிகளைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது, அதன் தொழிலாளர்களைப் பற்றி அல்ல.

கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் மூன்றாம் உலக ஊழியர்கள் துன்புறுத்தப்படுவது புதிதல்ல, அது வழமையாக நடைபெறும் ஒன்று.  பார்த்தும் பார்க்கதது போல இங்கே உள்ள அரசுகள் நடந்து கொள்கின்றன.  கனடாவில் பல்லாயிரக்கணக்கான வீட்டுத் தொழிலாளர்கள் குடியுரிமை ஆசையைக் காட்டி பிலிப்னைசு, சீனா போன்ற நாடுகளில் இருந்து மேட்டுக்குடி வீடுகளுக்கு வேலைக்கு ஒப்பந்தப்படி அழைக்கப்படுகிறார்கள்.  பிள்ளைப் பார்ப்பது, முதியோரைப் பராமரிப்பது, வீட்டுப் பராமரிப்பு போன்ற வேலைகளை சங்கீதா போன்று மேட்டுக்குடி மக்கள் வீடுகளில் தங்கி இருந்து செய்கிறார்கள்.  கனடாவில் இத் திட்டத்துக்குப் பெயர் Live-In Caregiver Program ஆகும்.  இவர்கள் வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும், வேறு வேலைகள் செய்ய முடியாது.  இவர்களுக்கு இருக்கும் ஒரே விடுதலைப் பாதை, பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒப்பந்தம் முடிவடைந்து அவர்கள் குடியுரிமை பெறுவது ஆகும்.  அப்படி அவர்கள் தமது பணியை முடித்தாலும், குடியுரிமை தருவதில் கனடிய அரசு பல இழுத்தடிப்புக்களைச் செய்யும். 

திறந்த சந்தை, திறந்த சந்தை என்று உரக்கக் கக்கும் மேற்குலக நாடுகள், தொழிலாளர்களுக்கான திறந்த சந்தையை ஏன் உருவாக்க மறுக்கின்றன.  ஒரு உண்மையான திறந்த சந்தையில் எங்கே இருந்தும் யாரும் ஒரு வேலையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.  ஆனால் குடிவரவு, தொழிலாளர்களின் சுதந்திரமான நகர்வு என்று வரும்போது வலதுசாரிகளின் திறந்த சந்தைக் கொள்கை புத்துக்குள் போய் ஒளித்துக் கொள்கிறது.  ஆப்பிரிக்காவின், மூறாம் உலகின் உண்மையான வளர்ச்சியில் மேற்கு உலகுக்கு அக்கறை இருக்கும் ஆனால், அங்குள்ள அடிப்படைத் தொழிலாளர்களை சுதந்திரமாக மேற்குலகில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய கொத்தடிமை முறைமையைத் தகர்க்கலாம். 

Labels: , , , ,