<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, October 15, 2012

இந்தியாவின் மூடநம்பிக்கை முதலிடத்துக்கு ஐக்கிய அமெரிக்காவால் ஆபத்து

சாமிகள், சாமிமார்கள், சாத்திரங்கள், சடங்குகள், சமயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வடித்து எடுக்கும் மூடநம்பிக்கைகள் மிகுந்த நாடு இந்தியா.  ஆனால் அத்தகையை இந்தியாவில் கூட ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் கூறிய கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டா என்று நினைக்கிறேன்.

தீவர கிறித்தவ, பழமைவாத, வலதுசாரி சட்ட மன்ற உறுப்பினரான போல் ஃபுரோன் (Paul Broun) உயிரியலில் மிக வலுவாக நிறுவப்பட்டுள்ள கரு வளர்ச்சியியல் (embryology), படிவளர்ச்சிக் கோட்பாடு (evolution) ஆகியவற்றையும், அண்டத்தின் தோற்றம் பற்றிய தற்போதைய அறிவியல் கோட்பாடான பெரும் வெடுப்புக் கோட்பாட்டையும் (big bang theory) முற்றிலும் மறுத்து அவை "நகரக் குழியில் இருந்து நேராக எடுத்துவரப்பட்ட பொய்கள்" ("evolution and embryology and the Big Bang Theory, all that is lies straight from the pit of Hell") என்று கூறி உள்ளார்.  மேலும் உலகம் 9000 ஆண்டுகள் வயதுடையது என்றும், இது பைபிளில் குறிப்பிட்டது போன்று 6 நாட்களில் உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.  எந்த ஒரு மதிப்புப் பெற்ற அறிவியலாளரும் ஏற்றுக் கொள்ளமாட்டா, விரிந்துகிடக்கும் ஆதாரங்களுக்கு எதிரான கூற்றுக்கள் இவை.  இதில் என்ன வேடிக்கை என்றால் இவர் வேதியியலில் பட்டம் பெற்றுள்ளார், அரசியலுக்கு வர முதல் மருத்துவராகவும் இருந்துள்ளார்.  இந்தியாவில் மட்டும் இல்லை ஐக்கிய அமெரிக்காவிலும் விலைக்கு பட்டங்கள் பெறலாம் போல் உள்ளது.  இன்னும் மேலாக அறிவியல் தொடர்பாக அரசின் கொள்கைகளை வகுக்கும் அறிவியல் குழுவிலும் இவர் இருக்கிறார்.  அறிவியலை கடவுள்தான் காபாற்ற வேண்டும். 

இது ஒரு விசரனின் உளறல் என்று நீங்கள் நினைத்துவிடலாம். அப்படி இல்லை.  தங்கள் உடல்கள் தொடர்பாக தாமே முடிவெடுப்பதற்கான பெண்களின் உரிமைகளை மறுக்கும்  ரொட் ஏக்கின் (Todd Akin) என்ற இன்னுமொரு தீவர கிறித்தவ, பழமைவாத, வலதுசாரி சட்ட மன்ற உறுப்பினர் கருக்கலைப்பு கற்பழிப்பு போன்ற சில சீரிய சந்தர்ப்பங்களிலாவது அனுமதிக்கப்படலாமா என்ற கேள்விக்கு, நியாபூர்வமாக பெண்கள் கற்பழிக்கப்பட்டால் பெண்கள் கருத்தரிக்க மாட்டார்கள் என்று கருத்துக் கூறினார் ("If it's a legitimate rape, the female body has ways to try to shut that whole thing down.").  இன்னுமொரு விசயம்.  இவரும் அதே அறிவியல் குழுவில் இருகிறார்.  இன்னுமொரு உறுப்பினர் (Randy Neugebauer) ஐ.அ வில் 2011 இல் ஏற்பட்ட பாரிய காலநிலைத் தாக்கங்களை குறைக்க இறைவனிடம் வேண்டி சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினார்.

இவர்கள்தான் இப்படி என்றால், நீங்கள் தவறு,  கிட்டத்தட்ட அரைவாசி ஐக்கிய அமெரிக்க மக்கள் படிவளர்ச்சி தொடக்கம் அண்டவியல் வரை அடிப்படை அறிவியல் கோட்பாடுகளை ஏற்காதவர்களாகவே உள்ளார்கள்.  2012 இல் வேதியியலுக்கும் இயற்பியலுக்கும் ஐக்கிய அமெரிக்கர்களே நோபல் பரிசுகளை வென்றார்கள்.  உலகின் தலை சிறந்த அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழங்களில் பெரும்பாலானவை ஐ.அ விலேயே இன்றும் உள்ளன.  ஆய்வும் புத்தாக்கமும் ஐ.அ வே இன்னும் முன்னிலையில் நிற்கிறது.  இது எப்படிச் சாத்தியமாகிறது? எவ்வாறு அடிப்படை அறிவியலை நம்பாத அமெரிக்கர்கள் அறிவியலில் முன்னிலையில் நிற்கலாம்.  பதில், எளிமையாக இவர்கள் அவர்களில்லை.  அவர்கள் இவர்களில்லை.  ஐ.அ அறிவியலாளர்களில் 90+ மேற்பட்டவர்கள் சமய நம்பிக்கை அற்றவர்கள் (http://www.stephenjaygould.org/ctrl/news/file002.html).  அமெரிக்காவின் மிகப் பெரிய பாக்கியம் அரச பாடசாலைகளில் இந்த பொய்மைகளை படிப்பிக்க முடியாது என்பதுதான்.  ஐக்கிய அமெரிக்க அரசமைப்புச் சட்டம் சமயமும் அரசும் வேறு வேறாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்கிறது (Separation of church and state).  ஐக்கிய அமெரிக்காவை ஒரு முகமாக விமர்சனம் செயுபவர்கள் இந்த வேறுபாடுகளை அவதானிக்க வேண்டும். 

ஆனால் தீவர கிறித்தவ பரப்புரை வேகமாக அமெரிக்க நிலைமையை மாற்றி வருகிறது.  சிறுது சிறிதாக இவர்கள் தமது மூடநம்பிக்கைகளை பாடசாலைகளில் திணித்து வருகிறார்கள்.  இந்த நிலை தொடர்ந்தால் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் அமெரிக்காவின் தலைமை வெகு விரைவில் தகர்க்கப்படும். சிறந்த அறிவுசார் சமூகங்கள் நலிவடைந்து, தேய்து போவதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இசுலாமிய உமாக்கள் தக்லீத் (கண்மூடித்தனமனா பின்பற்றல்) முறையை இறுக்கமாக அறிமுகப்படுத்தி பாரசீக/இசுலாமிய அறிவியலை குட்டிச்சுவராக்கிய வரலாறு அனைவரும் அறிந்ததே.

தீவர கண்மூடித்தனமான சமயத்தின் பரப்புரைகள் இன்று ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் இல்லை, உலகின் பல பாகங்களிலும் கேடுதல் விளைய காரணமாக அமைகின்றன.  இந்தியாவில் ஏற்கனவே நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கிறது. இந்தப் பரப்புரைகள் இவற்றை விரிவாக்கும், வளர்க்கும்.  கவலை வேண்டாம்.  இந்தியா மீண்டும் முதலித்துக்கு வந்துவிடலாம். 

மக்கள் விழிப்புப் பெற வேண்டும்.  இல்லை எனில் அறிவியல் தடைப்படும்.  அறிவியல் தடைப்பட்டால் மனித முன்னேற்றம் தடைப்படும்.

Wednesday, October 10, 2012

குடிவரவாளர் அனுபவங்கள் 3 - அக இனவாதம்

இன்றைய நிலையில் இலங்கையைப் போல இனவாதம் கோரமாகவோ, சட்ட மூலமாகவோ இங்கு இல்லை.  ஒப்பீட்டளவில், கனடா, குறிப்பாக ரொறன்ரோ இனவாதம் குறைந்த, பல்லினப் பண்பாட்டை வரவேற்கும் ஒரு சூழலைக் கொண்ட இடம் என்பதை மறுப்பதற்கில்லை.  சமூக நிறுவனங்கள் அனைத்தும் உடனேயே இனவாதம் அற்று மாறிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது.  கல்வி, மருத்துவம் போன்று சில தொழில்களில் எவ்வாறு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களோ அதே போல சில தொழில்களில் சில இனத்தவர்கள் அல்லது புதிய குடிவரவாளர்கள் அதிகமாக இருப்பது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே.  இங்கு புறவயமாக இனவாதம் குறைவு என்றாலும், அக வயமாக இனவாதம் இன்னும் பலரிடமும் உண்டு. 

எனக்கு இனம் x பண்பாட்டுக் கூறுகளைப் பிடிக்கும் என்பதை இனவாதமாக நான் பார்க்கவில்லை.  என் இனத்தின் மீது அல்லது பண்பாட்டின் மீது எனக்குப் பெருமை போன்ற கருத்து நிலைப்பாட்டையும் கூட நான் இனவாதமாகக் கருதவில்லை.  எனது இனம் பிற இனங்களை விடச் சிறந்தது, எனது இனத்தவர்கள் பிற இனத்தவர்களை விட மரபுவழியாகச் அல்லது மரபணுவழியாகச் சிறந்தவர்கள் என்ற நிலைப்பாட்டையும், அது வெளிப்படும் முறைகளையுமே நான் இனவாதமாகப் பார்க்கிறேன். 

மேலோட்டமாக, ரொறன்ரோவில், இனங்களுக்கு இடையே பண்பாட்டு வேறுபாடுகள் மட்டும் இன்றி பொருளாதார அதிகார வேறுபாடுகளும் உண்டு என்பது உண்மையே.  ஆனால் இந்த பொருளாதார அதிகார வேறுபாடுகளுக்கு சூழலியல், அரசியல், வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதை மறுத்து இவற்றை இனங்களின் பண்புகளாக வரையறை செய்வதே இனவாதம்.  எ.கா இங்கு முதற்குடி மக்களில் கணிசமானவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாகவும், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களாகவும், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உள்ளவர்களாகவும் உள்ளார்கள்.  இதற்கு அவர்களின் இனத்தையோ அல்லது மரபையோ காரணம் சுட்டுவது மடைமைத்தனமாகும்.  ஐரோப்பியர்களின் முதற்குடிமக்கள் இனப்படுகொலைகள், நில அபகரிப்பு., தொடர்ச்சியான அடக்குமுறைகள் முதற்குடிகளின் இன்றைய நிலைக்கு முதன்மைக் காரணம்.  இன்னுமொரு எடுத்துக்காட்டு அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களாக கறுப்பின இளைஞர்கள் இருப்பது.  இதற்கு பல நூற்றாண்டு அடிமை வரலாறு, கறுப்பின மக்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் தளர்ச்சி எனப் பல காரணங்கள் உள்ளன.  ஆகவே சூழலியல், அரசியல், வரலாற்றுக் காரணங்களைப் பாராமல் நிறை குறைகளை இனப் பண்புகளாகப் பார்ப்பது இனவாததின் ஒரு வடிவமே. 

ஒரு நாள் என் வேலையில் கறுப்பின மக்கள் விளையாட்டில் வீரர்களாக உள்ளார்கள் என்று தொடங்கிய ஒரு உரையாடல் கறுப்பின மக்கள் அறிவில் மத்திமமாக இருப்பார்கள் என்று சில வெள்ளை/யூத இனத்தவர்கள் கருத்துக் கூறலாயினர்.  கறுப்பின மக்கள் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றார்கள் என்பது மரபணு மட்டும் சார்ந்த ஒரு விடயம் இல்லை.  ஏன் என்றால் கறுப்பின மக்கள் நிறைந்து இருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மிகச் சிலரே ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.  ஐக்கிய அமெரிக்காவில் விளையாட்டே இனவாதம் குறைந்த, திறமைகளை மட்டும் முதன்மையாக கருத்தில் எடுக்கும் ஒரு துறையாக இருப்பதால் வாழ்க்கையில் வெற்றிபெற பெரும்தொகை கறுப்பின இளைஞர்கள் அத் துறையில் ஈடுபடுகின்றனர்.  ஒரு நாட்டின் குடிமக்கள் குறிப்பிட்ட துறையில் சிறப்புப் பெறுகிறார்கள் எனில் அந்த நாடு வழங்கும் வசதிகளும், சூழலியல் காரணங்களும் முக்கியம் பெறுகின்றன.  அடிமையாக இருந்த போது கறுப்பினத்தவர்கள் கல்வி பெறுவது கடும் தண்டனைக்கு உரிய குற்றமாக இருந்ததும், கல்விக் கட்டமைப்புகள் வெள்ளையர்களின் பண்பாட்டு படிமங்களைப் பின்பற்றுவதும் அவர்கள் கல்வியில் இணையான வளர்ச்சியைப் பெற பெரும் தடைகள் ஆகும். 

இன்று கல்வித்துறையிலும் வணிகத் துறையிலும் யூத இனத்தவர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது உண்மையே.  அவர்களில் சிலர் இது அவர்களின் மரபணு, அல்லது மரபியல் காரணங்களால் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே உள்ளனர்.  ஆனால் இத் துறைகளில் அவர்கள் செல்வாக்குச் செலுத்த ஐரோப்பியச் சூழல் ஒரு காரணம் ஆகும்.  யூதர்கள் நிலம் வைத்திருக்க முடியாது என்ற சட்டமும், இவர்களே வட்டிக்கு பணம் குடுக்க முடியும் என்ற சூழலும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம்.  இவர்களின் சமூக அமைப்பு ஒருவருக்கொருவர் உதவி செய்யப் பல கட்டமைப்புக்களைக் கொண்டது.  அதுவும் ஒரு முக்கிய காரணம் ஆக இருந்திருக்கலாம்.  எனவே இதை இனம் சார்ந்த ஒரு பண்பாக எடுக்க முடியாது.

ஒரு மக்கள் குழுவின் வெற்றி என்பது இனவின் மரபணுவில் இல்லை என்பதற்கு வட தென் கொரியாக்கள் சிறந்த உதாரணம் ஆகும்.  தென் கொரியா இன்றைய நவீன நாடுகளில் ஒன்று.  சராசரி தனிநபர் வருமானம் அ$23,749 ஆகும்.  வட கொரியா நலிவான நாடுகளில் ஒன்று.  சராசரி தனிநபர் வருமானம் அ$1,800 ஆகும்.  ஒரே மொழி, பண்பாட்டு, இன அடையாளம் கொண்டவர்கள் மிக வேறுபட்ட வாழ்வு நிலையைக் கொண்டிருப்பதற்கு வரலாறும் அரசியலுமே முக்கிய காரணங்கள் ஆகும். 

முதற்குடிகளோ, கறுப்பினமக்களோ, பிற இனத்தவோரோ பண்பாட்டு, அரசியல், பொருளாதார முன்னேற்றம் காண அவர்களின் இனத்துவ அடையாளம் ஒரு வளமாக அமைகிறது.  மொழி, கலைகள், தொழிற்கலைகள், வரலாறு, சமூக உதவி அமைப்புகள் சார்ந்த இந்த வளங்கள் மொத்த சமூகத்தையுமே மேம்படுத்துகின்றன.  ஆனால் இன அடிப்படையிலான ஏற்ற தாழ்வு மனப்பான்மை, மனிதர்களை மனிதர்களாப் பார்க்க, பழக, நடக்க தடையாக அமைந்திவிடும்.  இத்தகைய உறைந்த இனவாதம் இங்கேயும் பரவி உள்ளது.  நாம் எம்மை அறியாமலே சில முன்முடிவுகளை செய்துவிடுகிறேம்.  விழுப்புணர்வுடன் நாம் இருப்பதும், உறைந்த இனவாதம் தலைதூக்கும் போதெல்லாம் சுட்டிக் காட்டி, எதிர்ப்புத் தெரிவுத்து கூடிய புரிதலை ஏற்படுத்துவதும் எமது மனிதபிமானக் கடமை ஆகும்.