<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, June 18, 2011

தமிழ் அமைப்புகளிற்கு நடப்பு மொழியின் முக்கியத்துவம்

ஒரு மொழி பேணப்பட, வளர அது பயன்படுத்தப்படும் களங்கள் (domains), பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள், அமைப்புசார் ஆதரவு, மதிப்பு, பேச்சுச் சமூகம், மொழி வளம் ஆகியவை முக்கியம். வீடு, உறவுகள், இலக்கியம், கலைகள், ஊடகம், அரசாட்சி, உயர் கல்வி, அறிவியல், வணிகம், சமயம் என பல்துறைகளில் ஒரு மொழி பயன்படுத்தப்படும் மொழுதுதான் அது உயிர்ப்புடனும் திறனாகவும் இருக்கும். ஆனால் தற்போது தமிழ் மொழி பல களங்களில் தனது செல்வாக்கை இழந்து வருவது கவலைக்கு உரியது. இதற்கு மிக மோசமான முன்மாதிரிகளாக தமிழ் மொழியை பேணுவதற்காக வளர்ப்பதற்காக செயற்படும் அமைப்புகள் கூடத் தமது நடப்பு மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதான்.

இந்த செயற்பாட்டின் கேடுதல் பற்றி மொழியியலாளர் யோசுவா ஃபிசர்மன் அவர்கள் விரிவாகக் கருத்துக்கள் கூறி உள்ளார். நவோயோ மொழிப் பேணலில் ஈடுபட்டிருக்கும் பாடசலைகள் பற்றி பின்வரும் கருத்தைக் கூறுகிறார். "Compounding the problem from language revitalisation perspectives, most school-based Navajo language and literacy programmes treat Najvajo as supplemental education, thereby reinforcing English as the 'real' language of the school." மொழிப் புத்துயிர்ப்பு கண்ணோட்டத்தில், நவயோ மொழிக் கல்வி நவோயோவை ஒரு துணைப் பகுதியாகவே நடத்துகின்றது, அதனால் ஆங்கிலமே 'உண்மையான' மொழி என்பதை வலுவூட்டுகின்றன என்கிறார் அவர். இது தமிழுக்கும் பொருந்தும். தமிழ் மொழியைப் பேண, வளர்க்க முற்படும் அமைப்புகள் தமிழை தமது நடப்பு மொழியாகக் கொள்ளாதது ஆங்கிலமே 'உண்மையான' மொழி என்பதையே வலியூட்டும். அத்தகைய விளைவு அந்த அமைப்புகளின் இலக்குகளுக்கு முரணானது. நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்றால் அதை மீறிச் செயற்படுவதையே அவர்கள் ஒரு இலக்கா, பணியாகக் கொள்ளலாம்.

ஒர் அமைப்பின் நடப்பு மொழி என்றால், அந்த அமைப்பின் அன்றாட செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் மொழி அல்லது மொழிகள் ஆகும். இன்று தமிழியல், தமிழ் இலக்கியம், தமிழ்க் கணிமை, தமிழர் சமூக அரசியல் அமைப்புகள், ஊடகங்கள் பலவினது நடப்பு மொழியாக ஆங்கிலம் அதி வேகமாக வேரூன்றி வருகிறது. விசய் தொலைக்காட்சியில் பாடல் போட்டி நிகழ்ச்சியின் தலைப்புத் தொடக்கம் உரையாடகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமையும். பாடல்கள் மட்டும் பெரும்பான்மையாகத் தமிழில் அமையும். இந்த நிலைமையை தமிழ் தொலைக்காட்சிகளே ஏற்படுத்தின.

தமிழ் தொலைக்காட்சிகளின், அவற்றின் தொகுப்பாளர்களின் தமில் பற்றி எதிர்பார்ப்புக்கள் வைத்திருக்க வேண்டாம் என்றால், தமிழ் மொழியின் கூரிய முனையாக கருதப்படும் தமிழ் இலக்கிய அமைப்புகளிலும் தமிழ் நடப்பு மொழியாக இல்லாமல் இருப்பது மிகவும் கவலைக்கு உரியது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் எழுத்தாளர்களுக்கான விருது விழா அறிமுகம், நிகழ்ச்சித் தொகுப்புகள், மற்றும் நன்றியுரை ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்தன. நூல்கள் பற்றிய குறிப்புகளும், எழுத்தாளர்களின் உரைகளும் தமிழில் அமைந்திருந்தன. அடேங்கப்பா இதையாவது தமிழில் வைத்தார்களே என்று பலர் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் ஏன் நிகழ்ச்சித் தொகுப்பை ஆங்கிலத்தில் மட்டும் வைத்தார்கள்? தமிழ் தொகுப்பாளர்கள் கிடைக்கவில்லையா. இது காரணம் இல்லை. ஏன் என்றால் அந்த நிகழ்விலேயே ஐந்து இளையோராவது தமிழில் படைப்புக்களை சிறப்பாக அறிமுகம் செய்தார்கள். ஆங்கிலம் பிற இனத்தவர்களுக்கு விளங்கும். அங்கு வந்தவர்களில் 99% தமிழர்கள். ஆங்கிலம் இளையவர்களுக்கு விளங்கும். இது நாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒரு நிலைமை. பேச்சுத் தமிழ் இவர்களுக்கு விளங்கவில்லை என்று கூறுவது ஒரு சாட்டு. ஆங்கிலப் பயன்பாட்டிற்கு ஒரு முக்கிய காரணம் ஆங்கிலம் இங்கேயும் வர்க்கச் செல்வாக்கை அல்லது சமூக நிலையை அறைகூவப் பயன்படுத்தப்படுகிறது என்பது. தமிழ் கணிமைக்கான உத்தமம் அமைப்பிலும் நடப்பு மொழியாக ஆங்கிலமே பெரிதும் இருக்கிறது. தமிழர் தமிழர் என்று துடிக்கும் சமூக அரசியல் அமைப்புகளும் தமிழ் மொழியை தமது நடப்பு மொழியாகக் கொள்வது அருகி வருகிறது.

தமிழை நடப்பு மொழியாக கொள்வது முடியாதது ஒன்றுமில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் தொடக்க கட்டத்தில் தமிழில் கட்டுரைகள் எழுதிவிட்டு உரையாடல் பக்கத்தில் ஆங்கிலத்திலேயே உரையாடல்கள் நடக்கும். நாம் என்ன செய்ய நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை ஒருமுறை எண்ணிப் பார்த்தோம். நாம் தமிழிலேயே உரையாடல்களையும் வைத்துக் கொள்ளவது நல்லது என்று முடிவுசெய்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லா உரையாடல்களும், கையேடுகளும், கொள்கைகளும் தமிழிலேயே இருக்கின்றன.

தமிழை நடப்பு மொழியாக கொள்வதே நீங்கள் தமிழுக்கு செய்யும் ஒரு பெரும் பணியாக இருக்கும். அதை விடுத்து எங்களை அன்னியப்படுத்தார்கள். பிற மொழித் தொடர்பாடல் அவசியம் என்றால், அந்த மொழிகளிலும் செய்யலாம். ஆனால் தமிழ் கட்டாயம் நடப்பு மொழியாக தமிழ் மொழி அமைப்புகளில் இருத்தல் வேண்டும். அப்படி இல்லாத தமிழ் மொழி அமைப்புகள் எல்லாம் போலி, உயிர்ப்பு அற்றவை.

Labels: ,

Saturday, June 11, 2011

கனடாவில் வேகமாகச் சாகும் தமிழ்

புகலிடச் சூழலில் தமிழ் மொழி பேணுதலின் வரலாறு வெற்றிகளையும் தோல்விகளையும் கொண்டதாக இருக்கிறது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்களில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் மொழி பேணுதல் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்காவில், மொரிசியசில், சீசெல்சில், மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் மொழி பேணுதல் தோல்வி கண்டது. காலனித்துவ முறைமையின் வேறுபாடுகள், தூரம், தொழில்நுட்ப வசதிகள் போன்றவை இந்த வேறுபாட்டை விளக்கலாம். இந்த வரலாற்றுப் பின்னணியில் 1980 களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க, ஐரொப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தமிழ் மொழிப் பேணலையும் பார்க்கலாம்.

கனடாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழிப் பேணுதல் பற்றிச் சற்றும் அக்கறை கொண்டு செயற்படவில்லை. இது ஆங்கில மயச் சூழலின் காரணமாகத் தோற்றம் தந்தாலும், அனைத்து பிற வசதிகளைக் கொண்டிருந்தும் இவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். வசதிகள் இருந்தும் இங்குள்ள தமிழ் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் விழுக்காடு 20-25% தாண்டாது. தனிப்பட்ட அனுபவத்தில் இங்கு பிறந்த சிறுவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு தமிழில் பேச, வாசிக்க, எழுதத் தெரியாது. இவர்களே பெரும்பான்மை. சிலருக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்க சிரமப்படுவார்கள். மேலும் சிலர் பேசுவார்கள் ஆனால் எழுதவோ வாசிக்கவோ தெரியாது. தமிழ் வகுப்புகளுக்குப் போறவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணத் தெரியலாம், ஆனால் சில விதி விலக்குகளைத் தவிர தமிழ் மொழி அவர்களின் அறிவிற்கு எந்தப் பங்களிப்பையும் செய்வதில்லை.

இப்போது எல்லாம் தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் கீழே ஆங்கில எழுத்தில் உரையாடல்களைப் போடுவதால், அந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போகிறது. அம்மாக்கள், அப்பப்பாக்கள் இருப்போரும் கூடச் சிறுவயதில் தமிழ் பேசிவிட்டு, பின்னர் மறந்து விடுகிறார்கள். பல அம்மாக்கள் அவர்களுக்கு தமிழ் சொல்லித் தர வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு குழந்தைகள் அவர்களோடு தமிழில் தொடர்பாட முடியாமல் போய்விடுகிறது.

அவருக்கு தமிழ் தெரியும், அவர் படிக்க வேண்டியதில்லை. அவருக்கு பிரெஞ்சு, வயலின், கரத்தோ என்று நிறைய வகுப்புகள் உள்ளன, தமிழையும் சேற்பது தேவையற்ற சுமை. சிறுவயதில் தமிழைப் பேசினா, பிள்ளை பள்ளியில் சிரமப்படுவான். தமிழைப் படிச்சு என்ன செய்வது? இவைதான் பெற்றோர்களின் காரணங்களகாக இருக்கின்றன.

தமிழ் வீட்டு மொழியாக ஒரு காலம் வரை இருந்தாலும், பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள கொள்ள வீட்டு மொழி ஆங்கிலத்திற்கு தாவி விடும். சில தீவர சமயப் பற்றுப் பெற்றோர்கள் தேவாரங்களையும், சமசுகிருத மந்திரங்களையும் பிள்ளைகளுக்கு மனப்பாடம் செய்வித்து விடுவர். பிள்ளைகளைப் பொறுத்த வரையில் இரண்டுக்கும் ஒரே அளவு புரிதல் நிலைதான். தற்போது கிறித்தவ வழிபாடுகளும் தமிழில் அருகி வருகின்றன. உறவினர்களோடு ஊடாடும் போதும் காலப் போக்கில் ஆங்கிலப் பயன்பாடே அதிகரிக்கிறது. ஆங்கிலத்தில பேசிறது இங்கேயும் ஒரு வர்க்கத் தரத்தை வெளிப்படுத்துவாதக கருதப்படுகிறது.

இதே நிலை பிரான்சிலோ, நோர்வேயிலோ, யேர்மனியிலோ இல்லை. அண்மையில் பிரான்சில் 4000 மாணவர்கள் ஒரே சமயத்தில் தமிழ் மொழித் தேர்வு எழுதினார்கள். பெற்றோர்கள் மாணவர்களை கொண்டு வந்து காத்து இருந்து கூட்டிச் சென்றார்கள். நேர்வேயில் தமிழ் தாய் மொழி மாநாடு ஒன்றை அவர்கள் நடத்தினார்கள். யேர்மனியில் பெரும்பான்மைப் பிள்ளைகள் தூரத் தூர இருந்தும் தமிழ் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். ஐக்கிய இராச்சியம் தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமை இருக்கிறது எனலாம்.

எல்லாத்தையும் ஆங்கிலத்தில் பெற முடியும் என்ற நினைப்பிலோ என்னவோ, இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழி பெறுமதி அற்ற ஒன்றாக மாறி வருகிறது. எதனால் நாம் புலம்பெயர்ந்தோம் என்ற நினைவு அழிந்துபோய்விட்டது. தமிழ் மொழியின் பெறுமதியை, மதிப்பை, பயன்பாட்டை உணர்த்த வேண்டும், உயர்த்த வேண்டும். தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிப் பேண வேண்டும். தமிழ் கற்பித்தல் தொடர்பாக புத்தாக்கங்கள் செய்யவேண்டும். வீட்டில் தமிழ், தமிழர் நிகழ்வில் தமிழ் என்பதை உரக்கப் பரப்ப வேண்டும். தமிழ் மொழி ஒரு மொழி மட்டும் அல்ல, அது ஒரு உறவு, உணர்வு, அறிவு, வரலாறு. ஆனால் கனடாவைப் பொறுத்த வரையில் தமிழின் உறவை நாம் துண்டித்து அவர்களைத் தொலைத்துவிடுகிறோம். தமிழ் இங்கு மெல்லச் சாகவில்லை, வேகமாக நாங்களே சாகடித்துக் கொண்டிருக்கிறோம்.

Labels: